Wednesday, October 15, 2014

தலவிருட்சங்கள் தரும் பலன்கள் - வஞ்சிக்கொடி

தலவிருட்சங்கள் தரும் பலன்கள் - வஞ்சிக்கொடி

தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ள சிவன் கோயில்களிலும், விஷ்ணு கோயில்களிலும் தலவிருட்சங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக தமிழகத்தில் மிகவும் பழமை வாய்ந்த புராணக்கால கோயில்கள் அனைத்திலும் பல்வேறு வகையான மரங்கள்
தலவிருட்சங்களாக பக்தர்களால் வணங்கப்படுகின்றன. இவை வெறும் மரங்கள் அல்ல; கொடிய நோய்களை குணமாக்கக்கூடிய மருத்துவ குணங்கள் நிறைந்தவை. இதனாலேயே இந்த மரங்கள் தெய்வீக தன்மை கொண்டிருக்கின்றன.

பெண்களை அதிகமாக தாக்கக்கூடியது மார்பக புற்றுநோய். இந்த நோயில் இருந்து பெண்களை காப்பாற்றும் அரிய வகை மூலிகை செடிதான் சீந்தில் கொடி என்று அழைக்கப்படும் வஞ்சிக் கொடியாகும். சித்த வைத்தியத்தில் வஞ்சிக் கொடி முக்கியத்துவம் பெற்றுள்ளது. சீந்தில் கொடிக்கு, வஞ்சி மரம், ஆகாச வல்லி, அமிர்தவல்லி, சோமவல்லி, சாகா மூலி என்று பல பெயர்கள் உண்டு. பெயரைக் கேட்டாலேயே நடுநடுங்க வைக்கும் எய்ட்ஸ் மற்றும் வெட்டை, மேகம் போன்ற கொடிய நோய்களை குணமாக்கும் மருந்து வஞ்சிக் கொடியில் உள்ளது.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்குவதற்கு வஞ்சிக் கொடியை சாப்பிட கொடுப்பதும் அந்த கால வழக்கமாகும். வஞ்சிக்கொடி சர்க்கரை நோயாளிகளுக்கும், எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் நல்ல மருந்து என்று அகத்திய முனிவர் அன்றே எழுதி வைத்திருக்கிறார். இன்றைய விஞ்ஞான மருத்துவ ஆராய்ச்சியிலும் மேற்கண்ட மருத்துவ ஆற்றல் உண்மையென்று உணரப்பட்டுள்ளது. மார்பக புற்றுநோயால் ஏற்படும் அடைப்பின் காரணமாக உருவாகும் மஞ்சள் காமாலை, காச நோய்களில் இருந்து நோயாளிகளை பாதுகாக்கக்கூடிய மருந்து சீந்தில் கொடியில் உள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

சீந்தில் கொடியிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து, சிறுநீரக செயல் இழப்பு, ஆண்மைத்தன்மை குன்றுதல், கல்லீரல் கோளாறு ஆகிய நோய்களுக்கு கொடுக்கப்படுகிறது. சிறு உபாதைகளான மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறுகள், நாள்பட்ட காய்ச்சல் மற்றும் சீதபேதியை குணமாக்கும். வெட்டை நோயை விரட்டும். இந்திரியம் தானாக வெளியேறுவதை தடுக்கும். இந்த கொடி கசப்புச் சுவை கொண்டது. ஏதாவது ஒரு மரத்தைப் பற்றிக் கொண்டு ஒட்டுண்ணியாகப் படரக்கூடியது. ஆலமரத்தைப் போலவே இதன் பிரதான கிளைகளிலிருந்தும் மெல்லிய கிளைகள் விழுதுகள் போலத் தொங்குகின்றன.

தண்டுப் பகுதியில் ஆங்காங்கே வெண்மை வண்ணத்தில் சில முண்டுகள் தெரிகின்றன. வெற்றிலையைப் போன்ற தோற்றம் கொண்டவை இதன் இலைகள். சீந்தில் கொடியின் அனைத்துப் பாகங்களும் கசக்கும். வேதத்தில், ‘தன்வந்திரி மகரிஷியின் இரண்டு கைகளாக சீந்தில் கொடி உள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது. உயிர் காக்கும் மூலிகைச் செடிகளில் சீந்தில் கொடி முதன்மையான இடத்தில் உள்ளது. இதை மெய்ப்பிக்கும் வகையில் ராமாயண சம்பவம் ஒன்றைக் குறிப்பிடலாம். “ராமனுக்கும், ராவணனுக்கும் கடும் போர் நடந்து கொண்டிருக்கிறது.

ராமர் தனது படையில், சுக்ரீவன் தலைமையிலான குரங்குகளைப் பெருமளவில் பயன்படுத்தினார். இரு தரப்பிலும் உயிர் பலிகள் ஏற்பட்டன. தமது படையில் இறந்துபோன குரங்குகளை மீண்டும் உயிர்ப்பிக்கச் செய்ய வேண்டும் என்று ராமன் விரும்பினான். அவன் விருப்பத்தை நிறைவேற்ற தேவேந்திரன் அங்கே வந்து அமுதத் துளிகளை பூமியில் தெளித்தான். மண்ணில் அந்த அமுத நீர் பட்ட இடங்களிலெல்லாம் சீந்தில் கொடி முளைத்து வளர்ந்தது. அந்த சீந்தில் கொடியின் காற்று பட்டதும் இறந்து கிடந்த குரங்குகள் எல்லாம் மீண்டும் உயிர் பெற்று எழுந்தன. இதைக்கண்டு ராமன் மகிழ்ச்சி அடைந்தான்.

இதனால்தான் சீந்தில் கொடியை சாகா மூலிகை என்றும் சித்தர்கள் அழைத்தார்கள். மரணத்தை வெல்லக்கூடிய மூலிகைகளில் சீந்தில் கொடியும் ஒன்று. சீந்தில் கொடி என்கிற வஞ்சிக் கொடியை, திருக்கருவூரில் உள்ள பசுபதீஸ்வரர் கோயிலில் தல விருட்சமாகத் திகழ்கிறது. இந்த ஒரு கோயிலில் மட்டும் தான் வஞ்சிக் கொடி தலவிருட்சமாக இருப்பதாக அறிய முடிகிறது. கோயில் பிராகாரத்தில் வன்னி மரத்தில் வஞ்சிக்கொடி படர்ந்திருப்பதை காணலாம். வஞ்சிக்கொடி பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பரிகாரத் தலவிருட்சமாக வணங்கப்படுகிறது.

இந்த வஞ்சிக்கொடியை உட்கொண்டு கடுவெளி சித்தர் பல ஆண்டுகளாக உயிர் வாழ்ந்து, பல அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறார். குலோத்துங்க சோழன் ஆட்சி காலத்தில் கடும் பஞ்சத்தில் இருந்து மக்களைக் காத்தவர் இந்த கடுவெளி சித்தர். திருக்கருவூரில்தான் பிரம்மன் தனது படைப்புத் தொழிலைத் தொடங்கினான் என்று கோயில் தலப்புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இத்தலத்தைப்பற்றி திருஞான சம்பந்தர்,

“தொண்டெலாமலர் தூவியேத்த நஞ்சு
உண்டலாகுயிர் ஆய தன்மையர்
கண்டனார் கருவூருள் ஆனிலை
அண்டனார் அருள் ஈயும் அன்பரே”
- என்றும்

“தேவர் திங்களும் பாம்புஞ் சென்னியில்
மேவர் மும்மதி வெய்த வில்லியர்
காவலர் கருவூரு னானிலை
மூவராகிய மொய்ம்பரல்லரே!’’

- என்றும் பாடியுள்ளார். திருக்கருவூர் திருத்தலம் பல்வேறு சிறப்புகளைக் கொண்டது. பலருக்கு முக்தியளித்த தலம். கருவூர் சித்தர் ஜீவசமாதியடைந்து அருவமாக இறைவனுக்கு பூஜை செய்து வருவதாக இன்றளவும் பக்தர்களால் நம்பப்படுகிறது. படைப்புத் தொழிலில் ஈடுபட்டு இருந்த பிரம்மன் ஒரு முறை சற்று கண் அயர்ந்த நேரம் பார்த்து காமதேனு பசு இறைவனை வணங்கி, தானும் சிருஷ்டி ரகசியத்தைத் தெரிந்துகொள்ள வேண்டி தவம் இருந்த தலம். இதனால்தான் திருக்கருவூருக்கு கருவூர், கற்பபுரி என்றும் இறைவனை பசுபதீஸ்வரர் என்றும் அழைக்கிறார்கள்.

தேவர்கள், சுக்கிரன், முசுகுந்த சோழ மன்னன், பிரம்மன், திக்குப்பாலர்கள் இறைவனை பூஜித்த தலம்தான் திருக்கருவூர். விபண்டன் என்ற வேடனுக்கும் எறிபத்த நாயனாருக்கும், புகழ்ச் சோழ நாயனாருக்கும் இறைவனால் முக்தி அளிக்கப்பட்ட தலமாகும். கருவூர் திருச்சியில் இருந்து கோவை செல்லும் சாலையிலும், ரயில் மார்க்கத்திலும் உள்ளது. திருச்சியில் இருந்து 45 மைல் தொலைவில் உள்ளது. சாகா மூலிகையான வஞ்சிக் கொடியை தலவிருட்சமாகக் கொண்டிருக்கும் கருவூர் பசுபதீஸ்வரர் கோயிலுக்குச் சென்று இறைவனை வழி பட்டு பேரருள் பெறுவோம்.

No comments:

Post a Comment