Tuesday, April 1, 2014

குலதெய்வத்தின் அருள் கிடைக்க

குலதெய்வம் வழிபாடு மிக முக்கியமான ஒரு வழிபாடாகும். பலர் தங்களுக்கு விருப்பமான தெய்வம் (இஷ்ட தெய்வம்) ஒன்றை தொடர்ந்து வழிபட்டு வருவார்கள். உதாரணமாக திருப்பதி வெங்கடாசலபதி கோவில் போன்ற பிரபல கோவில்களுக்கு மட்டுமே செல்வது பலர் வழக்கம். இவர்களில் சிலர் வேறு கோவில்களுக்கு செல்வதும் கிடையாது.

எது எப்படி இருந்தாலும் குலதெய்வத்தை வழிபடாமல் எத்தனை கோவில்களுக்கு சென்றாலும் பலன் குறைவு தான். மூலவரை வழிபடாமல் அங்கிருக்கும் சுவர் சித்திரங்களை வழிபட்டு வருவது போல் தான் பிற வழிபாடுகள் மட்டும் செய்வது. குலதெய்வம் என்பது வாழையடி வாழையாக தலைமுறை தலைமுறையாக நம் முன்னோர்கள் வழிபட்டு வருவது.

அய்யனார், கடலைமாடன் என்று பல (கிராம) தெய்வங்கள் உண்டு. பல ஊர்களில் அங்கு வலுவான ஒரு காரணத்தால் மரணமடைந்தவரின் பெயரில் கோவில் ஒன்றை எழுப்பி அதை அவ்வூரின் ஒரு சாரார் குலதெய்வமாக ஏற்று வழிபடுகின்றனர்.

(உதாரணமாக ஊரைக் காக்க கள்ளர் அல்லது எதிரிகளுக்கு எதிராக சண்டையிட்டு வீரமரணம் அடைந்தவர்கள் பெரும்பாலான குல தெய்வங்களுக்கு பின் இம்மாதிரி ஒரு நிகழ்வு இருக்கும். சில இடங்களில் அம்மாதிரி இன்றி பெருமாள் போன்றவர்களையும் குலதெய்வமாக வணங்குவதும் உண்டு.

ஆயிரம் பெருமாள் கோவில் இருந்தாலும் அம்மாதிரி குலதெய்வ கோவில்களுக்கு சென்று வணங்குவது முதல் சிறப்பு. சில இடங்களில் அம்மாதிரி இன்றி பெருமாள் போன்றவர்களையும் குலதெய்வமாக வணங்குவதும் உண்டு. பெருங்கோவில்களுக்கும் இவற்றுக்கும் உள்ள முக்கிய வித்தியாசம் என்னவென்றால், இம்மாதிரி குலதெய்வ கோவில்கள் குறிப்பிட்ட சில சமூகம் அல்லது குடும்பங்களின் பராமரிப்பில் அவர்களுக்காகவே நிர்மாணிக்கப்பட்டு இயங்கும்.

பங்குனி உத்திரம் போன்ற முக்கிய நாட்களில் மட்டுமே களை கட்டி பொங்கல், கிடா வெட்டு, பலி என்று அமர்க்களப்படும். மற்ற நாட்களில் கேட்பாரின்றி இருக்கும். ஆனாலும் அந்த சாமியை குலதெய்வமாகக் கொண்டவர்கள் எந்த முக்கிய நிகழ்வாக இருந்தாலும் குலதெய்வ கோவில் பூசாரியைத் தேடிப்பிடித்து கோவிலைத் திறந்து வழிபட்டு அதன் பின்னரே அந்த வேலையைத் துவங்குவார்கள்.

அதுவே முறையானதாகும். உங்கள் குலதெய்வத்தை வழிபடாதிருந்தால், உடன் வழிபடத் தொடங்குங்கள். குலதெய்வம் தெரியாதிருந்தால் ஊரில் வயதான பெரியவர்களிடம் கேளுங்கள். சொல்லி விடுவார்கள். உங்க தாத்தா ஒங்கு குலச்சாமி வெட்டேரி கோவிலுக்கு போகாம எந்த காரியத்தை செஞ்சாரு அந்த காலத்துல என்று பெரும்பாலும் பட்டென்று பதில் வந்து விடும்.

தெரியவில்லை என்றாலும், பலரிடம் விசாரித்தால் எப்படியாவது தெரிந்து விடும். இல்லாவிடில் உங்கள் ஜாதகத்தை அல்லது உங்கள் தந்தை ஜாதகத்தை ஜோதிடர் யாரிடமாவது காட்டி கேட்டால் உத்தேசமாக சொல்லி விடுவார்கள். ஐந்தாமிடம் அதன் அதிபதியை வைத்து திசை, குறிகளை சொல்லி விடுவார்கள். அதை வைத்து அடையாளம் கண்டு கொள்ளலாம்.

அந்த தெய்வத்திற்கென்று மாதத்தில் ஒரு நாளும், வருடத்தில் ஒரு நாளும் சிறப்பாக வழிபாடு நடக்கும். குல தெய்வத்திற்கென உள்ள வழிபாட்டு முறை மற்றும் முக்கிய வழிபாட்டு பொருளையும் தெரிந்து கொள்ளுங்கள். அங்கு செல்லும் போது மறக்காமல் அந்த பொருளை வாங்கிச் செல்லுங்கள்.

உதாரணமாக ஒரு சில கோவில்களில் தீபத்திற்கு நல்லெண்ணை, ஏன் சாராயம் கூட இருக்கலாம். தவறாது வாங்கிச் சென்று படையுங்கள். குலத்தைக் காப்பதால் தான் குலக்கடவுள். மற்ற கடவுள்களுக்கு இல்லாத சிறப்பு பெயர் குலதெய்வத்திற்கு மட்டும் தான் உண்டு. குலம் தழைக்க வேண்டும். முன்னோர் சாந்தி அடையவேண்டும்.

பின்னோர் செழிக்க வேண்டும் என்று நம் முன்னோர்களால் வழிபடப்பட்ட குல தெய்வத்தின் அருள் நம் மீது பட்டால் துன்பங்கள் பறந்திடும். பல பிரச்சினைகளில் சிக்கி உள்ளவர்கள் பரிகாரம் போன்ற முயற்சிகளில் இறங்கும் முன் குலதெய்வத்தை நேரில் சென்று வழிபட்டு அதன் பின்னர் தொடங்கவும்.

No comments:

Post a Comment