Friday, October 23, 2015

அன்னாபிஷேகம் – உணர்ந்து வழிபட வேண்டி

அன்னாபிஷேகம் – உணர்ந்து வழிபட வேண்டி

ஐப்பசி மாதத்தில் வரும் பௌர்ணமியன்று சிவாலயங்களில் மஹா அன்னாபிஷேகம் நடைபெறும் வரும் 26.10.15 இரவுமுதல் 27.10.15 மாலைக்குள், இந்த அன்னாபிஷேக நிகழ்வை உணர்ந்து அனுபவித்து வழிபடவேண்டி இப்பதிவு.

சிவ சொந்தங்கள் பாதம் பணிகிறேன், 
நமச்சிவாய

உணராமல் வழிபடுவதைவிட உணர்ந்து வழிபடவேண்டி, எதோ அன்னாபிஷேகம் பார்த்தால் நல்லது என்று யாரோ சொல்வதை கேட்டு வழிபடுவதை காட்டிலும், அந்த நிகழ்வு எதனால் நிகழ்கிறது அதன் உட்கருத்து உணர்ந்துகொண்டு வழிபட்டால், அதன் பயன் நாம் நன்றாக பெற முடியும்,

அன்னாபிஷேகம் – அன்னமாகிய அரிசியை சமைத்து அதை சிவனுக்கு அபிஷேகம் செய்வது.

அன்னம் – அரிசி நம் வாழ்வில் ஒரு முக்கிய பங்கு அளிக்கிறது, அந்த அரிசின் ரூபம் பாணலிங்கம் என்று சொல்லக்கூடிய சிவருபமே, ( நங்கள் வெளிநாட்டில் உள்ளோம் இங்கு அரிசி கிடையாது என்று சொல்வது கேட்கிறது கோதுமையும் அதே ரூபம்தான் ).

நமக்கு அனுதினமும் அன்னம்பாலிக்கும் (உணவு அளிக்கும்) இறைவன் கருணையை உணர்ந்து அவருக்கு அந்த அன்னத்தை கொண்டு செய்யப்படும் அபிஷேகம்.

இந்த அபிஷேகதின் உட்பொருளை பார்த்தால்,
பல லட்சம் லிங்கம் கொண்டு ஒரு லிங்கத்திற்கு அபிசேகம்,
லிங்கத்தை உணவாககொண்டு,
லிங்கமாகிய கருவில் இருந்து உறுப்புகொண்டு உருவம் பெற்ற ஆன்மா,
தான் இன்று ஜீவிக்க காரணமான அன்னாமாகிய ( லிங்கத்தை – சிவத்தை ) கொண்டு தன்னை ஒரு உருக்கொண்டு வாழ்விக்கும் சிவத்திற்கு நன்றியுடன் செய்யவேண்டிய அபிசேகம்.

எப்படி செய்வது :
தம்மை தூய்மைப்படுத்தி கொண்டு சிவநாமம் சொல்லிக்கொண்டு அரிசியை அன்னமாகி சுடு ஆரியாவுடன் சிறிது தண்ணீர்விட்டு நாம் இல்லத்தில் உள்ள லிங்கதிருமேனிக்கு அந்த அன்னதைகொண்டு அபிஷேகம் செய்து திருமுறைகள் பாடி வழிபாடு செய்தபின்பு அந்த அபிசேகம் செய்த அன்னத்தை அனைவருக்கும் வழங்கி சிவத்தை சுவையுங்கள்.

திருக்கோவில் செய்யப்படும் அன்னாபிஷேகம் நிகழ்வில் பங்குகொண்டு, அன்னாபிஷேக நிகழ்வுக்கு தங்களால் முடிந்த உதவிசெய்து, பலலட்சம் சிவத்தை கொண்டு ஒரு சிவத்திற்கு செய்யப்படும் அபிசேகத்தை மனதார கண்டு பயன்பெற வேண்டுகிறேன்.

எல்லாம் வல்லவன் கருணையால் எந்த ஆகம விதியும் அறியாத அடியேன் எண்ணத்தில் ஈசன் திருவருளால் தோன்றிய பதிவு,

ஆகம விதியில் தவறு இருந்தால் அடியேனை மன்னிக்கவும்.

திருச்சிற்றம்பலம்

அடியேன்
அங்கமுத்து குமார்

Thursday, October 22, 2015

ஒரு நாள் குளித்தால்... ஆயிரம் ஆண்டு குளித்த பலன்!



ஒரு நாள் குளித்தால்... ஆயிரம் ஆண்டு குளித்த பலன்!
வான் பொய்த்தாலும் தான் பொய்க்காத காவிரி என காவிரியின் பெருமையை விவரிப்பதே துலா புராணம் ஆகும்.ஐப்பசி மாதத்தில் தினமும் சூரிய உதயத்திற்கு முன் காவிரியில் நீராடி புனிதமாவதே துலா ஸ்நானம் வழிபாடாகும்.இதிலும் ஐப்பசி மாதத்தில் கடைசி 2 நாட்களில் நீராடுவது மிகவும் சிறப்பு.காவிரியில் புனித நீராடிய பிறகு துலா புராணத்தினை முழுவதுமாகவோ அல்லது ஒவ்வொரு பகுதியாகவோ தினமும் படிப்பது சகல நலன்களையும் தரும்.பொதுவாக 2 நதிகள் கூடும் இடத்தை கூடுதுறை அல்லது சங்கமம் என்று கூறுவோம்.தமிழ்நாட்டில் பவானி,உ.பி.யில் அலகாபாத்,கர்நாடகாவில் திருமுக்கூடல் ஆகியவைகள் மிகவும் சிறப்பு வாய்ந்த சங்கம இடங்களாகும்.
63 கோடி தீர்த்தம்:இந்தியாவில் கங்கை உள்பட 63 கோடி தீர்த்தங்களும் தங்களிடம் சேர்ந்துவிட்ட பாவத்திலிருந்து விடுபட ஐப்பசியில் காவிரியை நாடி வருவதாக பல புராணம் கூறுகிறது.துலா ஸ்நானத்திற்கு மிகவும் முக்கியமான தலங்கள் சிவாலய சிறப்புடைய மயிலாடுதுறையும்,விஷ்ணுவாலய சிறப்புடைய ஸ்ரீரங்கமும் ஆகும். இந்த ஸ்நானத்திற்கு கடை முழுக்கு அல்லது முடவன் முழுக்கு என்று பெயர்.பார்வதி மயில் உருவம் எடுத்து சிவனை வழிபட்ட தலமாதலால் மாயூரம் என்று வடமொழியிலும் மயிலாடுதுறை என்று தமிழிலும் வழங்கப்படுகிறது.இத்தலம் தஞ்சாவூரிலிருந்து சிதம்பரம் செல்லும் வழியில் உள்ளது.திருக்கடையூரில் சிவன் எமனை பதவியிலிருந்து நீக்கி விட்டார்.அப்போது எமன்(தர்மதேவன்)மாயூரத்தில் உள்ள மாயூரநாதரை வழிபட்டு மீண்டும் அந்த பதவியை பெற்றான்.எனவே இத்தலம் தர்மபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.
இடபத்தின் செருக்கு:ஒரு சமயம் சிவன் தன் வாகனமான இடபத்தின் மீது ஏறி உலகை சுற்றி வந்தார்.அப்போது இடப வாகனம் செருக்கடைந்து சுற்றி வந்து காவிரியின் நடுவில் தங்கி விட்டது.அதன் கர்வத்தை அடக்க சிவன் தன் கால் விரலை ஊன்றி அதை பாதாளத்தில் அமிழ்த்தி விட்டார். பிறகு இடபம் மனம் வருந்தி இறைவனை வேண்ட சிவனும் மனமிறங்கி அந்த இடபத்தை அங்கேயே இருந்து காவிரியில் நீராடுவோர்க்கு அருள்புரிந்து வருமாறு கட்டளையிட்டு மறைந்தார்.வானா அரசன் வாலி சிறந்த சிவபக்தன்.அவன் காவிரியின் வடகரையிலுள்ள குரங்காடு துறையில் அருளுகின்ற சிவனை வழிபட்டு வந்தான் என்றும், அவனே பிற்காலத்தில் ராவணனை ஒடுக்கியவன் என்றும் திருஞானசம்பந்தர் தன் பாடலில் தெரிவிக்கிறார்.காவிரியிலிருந்து வெகுதூரத்தில் இருப்பவர்கள் ஐப்பசி மாதத்தில் ஒரு நாளாவது காவிரியில் நீராட செல்லலாம். இயலாதவர்கள் தாங்கள் நீராடும் நதியையே காவிரியாக கருதி நீராடுவது நல்லது.ஆயிரமானாலும் மாயூரமாகுமா என்பது பழமொழி.ஆயிரம் வருஷம் கங்கையில் தினம் குளித்தால் என்ன புண்ணியம் கிடைக்குமோ அந்த புண்ணியம் ஐப்பசி மாதத்தில் மாயவரம் காவிரியில் ஒரு நாள் குளித்தாலே கிடைத்துவிடும் என்பது ஐதீகம்.

தகவல்-ஹரிஹரன்- பதிவு-ஆன்மீக சிந்தனையில்  அடியேன் -கணேசன் பாண்டிச்சேரி


Saturday, October 10, 2015

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ! ! !



திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ! ! !
திருவண்ணாமலைத் தலம் நடுநாட்டுத் தலங்களுள் முதன்மையானது. பஞ்சபூதத் தலங்களுள் இது அக்னித் தலம். நால்வராலும் பாடப்பட்ட தலம்.
எங்கிருந்து நினைத்தாலும் முக்தி கொடுக்கும் தலம் இதுதான்.
இத்தலத்தில்தான் திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம்மானை, அருணாச்சல அஷ்டகம் போன்ற புனித நூல்கள் பிறந்தன.
மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூவகை சிறப்புகள் கொண்ட தலம் இது.
பிரம்மன், திருமாலின் ஆணவம் அழிந்த தலம். அர்த்தநாரீஸ்வரர் கோலம் கொண்ட தலம்.
கார்த்திகை தீபத்தின் மூலத் தலம்.
ஆதாரத் தலங்களுள் இது மணிப்பூரகத் தலம்.
இத்தல மலையுச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தால், இது உலகப் புகழ்பெற்ற தலம்.
நகரின் மையத்தில், மலையடிவாரத்தில் !
அண்ணாமலையார் ஆலயம் 24 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ளது.
ஆலயத்தில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன.
கோபுரங்கள் மலிந்த ஆலயம் இது.
இவ்வாலயத்தின் உள்ளே ஆறு பிராகாரங்கள் உள்ளன.
142 சந்நிதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1,000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதனடியில் பாதாள லிங்கம் (பால ரமணர் தவம் செய்த இடம்), 43 செப்புச் சிலைகள், கல்யாண மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபம் என அமைந்த ஆலயம்.
ஆலயத்தின் உள்ளேயே சிவகங்கைத் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்ற இரு பெரிய குளங்கள் உள்ளன.
கொடிக்கம்பம் அருகே செந்தூர விநாயகர் பிரம்மாண்டமாக காட்சி தருகிறார்.
பஞ்ச லிங்கங்களும், நான்கு முகங்கள் கொண்ட பிரம்ம லிங்கமும் உள்ளன.
காலபைரவர் சந்நிதியும் உண்டு.
மூன்று இளையனார்!
இங்கே முருகப்பெருமான் இளையனார் என்னும் பெயரில் மூன்று இடங்களில் வணங்கப் பெறுகிறார்.
அருணகிரியுடன் சவால் விட்டான் சம்பந் தாண்டான்.
அதற்காக முருகன் அருணகிரிக்கு கம்பத்தில் காட்சி தந்தார்.
இவர்தான் கம்பத்திளையனார் என்ற பெயரில் வளைகாப்பு மண்டபத் தூணில் காட்சி தருகிறார்.
அருணகிரி வல்லாள கோபுரத்தின் மீதேறி கீழே குதித்து உயிர்விட முயன்றபோது, தடுத்தாட்கொண்டு அருள்புரிந்து திருப்புகழ் பாட வைத்தவர் கோபுரத்திளையனார்.
கோபுரம் அருகிலேயே சந்நிதி. பிச்சை இளையனார் சந்நிதி, கிளிகோபுரம் அருகே யுள்ளது.
காமதகனம் நடக்கும் சிவாலயம் இது ஒன்றுதான்.
ஆடிப்பூரத்தன்று மாலை, ஆலயத்தின் உள்ளேயே உண்ணாமுலையம்மன் சந்நிதிமுன் தீமிதி விழா நடத்தும் ஆலயமும் இது ஒன்றுதான்.
திருவிழா நாட்களில் திட்டிவாசல் வழியே உற்சவமூர்த்திகள் வெளிவருவதும் இவ்வாலயத்தில் மட்டும்தான்.
அருணகிரிக்கு விழா எடுக்கும் ஆலயமும் இதுதான்.
ஒன்பது கோபுரங்கள்!
கிழக்கே ராஜகோபுரம் (217 அடி உயரம்), வீரவல்லாள கோபுரம்,
கிளி கோபுரம் (81 அடி உயரம்);
தெற்கே திருமஞ்சன கோபுரம் (157 அடி உயரம்),
தெற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்);
மேற்கே பேய் கோபுரம் (160 அடி உயரம்),
மேற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்);
வடக்கே அம்மணி அம்மன் கோபுரம் (171 அடி உயரம்),
வடக்கு கட்டை கோபுரம் (45 அடி உயரம்).
சிவபெருமானே அண்ணாமலையாகக் காட்சி தருகிறார்.
இதை காந்த மலை என்பர்.
காரணம், இம்மலையை தரிசிக்க வருவோரை மீண்டும் மீண்டும் காந்தம்போல கவர்ந்து இங்கு வரவழைக்கும்.
கிருத யுகத்தில் இது அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் தாமிர மலையாகவும், இக்கலியுகத்தில் கல் மலையாகவும் திகழ்கிறது.
மலையின் உயரம் 2,688 அடி. (800 மீட்டர்).
கிரிவலப் பாதையின் தூரம் 14 கிலோமீட்டர்.
இப்பாதையில் 20 ஆசிரமங்களும்,
360 தீர்த்தங் களும்,
பல சந்நிதிகளும்,
அஷ்ட லிங்கங்களும் உள்ளன.
26 சித்தர்கள் வாழ்ந்துள்ளனர்.
அடிக்கு 1,008 லிங்கம் அமைந்துள்ளது என்பர்.
மலையை ஒவ்வொரு இடத்தில் நின்று பார்த்தால் ஒவ்வொரு வகை தரிசனமாக 27 வகை தரிசனம் காணலாம்.
உமைக்கு இடபாகம் கொடுத்த ஈசன்!
திருக்கயிலாயத்தில் ஆழ்நிலை தியானத்தில் இருந்த சிவபெருமானின் கண்களை அன்னை பராசக்தி விளையாட்டாக மூடியதால் இப்பிரபஞ்சமே இருண்டது.
அனைத்து ஜீவராசிகளும் துன்பத்திற்கு ஆளாகி தவித்தன.
இதனால் ஏற்பட்ட பாவத்தை போக்க பூவுலகில் காஞ்சிபுரம் கம்பை நதிக்கரையில் அன்னை காமாட்சியாக தவம் இருந்தாள்.
ஒருநாள் கம்பை நதி வெள்ளத்தில் தான் அமைத்த சிவலிங்கம் கரையாமல் இருக்க மார்போடு சேர்த்து அணைத்தார் அன்னை காமாட்சி.
இதனால் அன்னையின் பாவத்தை சிவபெருமான் நீக்கினார்.
அய்யனே நீங்கள் எப்போதும் என்னை பிரியாதிருக்க தங்கள் திருமேனியில் எனக்கு இடபாகம் தந்தருள வேண்டும் என சக்தி வேண்டினார்.
அதற்கு சிவபெருமான், அண்ணாலை சென்று தவம் செய் என உத்தரவிட்டார்.
அவ்வாறே உமையும் தவம் செய்தாள்.
கார்த்திகை மாதத்தில் பவுர்ணமியும், கிருத்திகையும் சேரும் நாளில் மலையின்மீது பிரகாசமான ஒளி ஒன்று உண்டானது.
அப்போது ‘மலையை இடதுபுறமாக சுற்றிவா’ என அசரீரி ஒலித்தது. அதன்படி கிரிவலம் சென்ற அன்னையை அழைத்து தனது மேனியில் இடபாகத்தை அளித்து ஆட்கொண்ட சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராக காட்சியளித்தார்.
இதையும் நினைவுகூர்ந்தே அண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
மலையளவு பயன்!
நரசிம்மர் இரணிய வதம் செய்தபோது, அருகிலிருந்த சிறுபாலகனான பிரகலாதனை நரசிம்மரின் உக்கிரம் தாக்கவில்லை.
காரணம் இரணியன் மனைவி கர்ப்பமாக இருந்தபோது நாரதர் யோசனைப்படி கிரிவலம் வந்தாள்.
அப்போது பெய்த அமுத மழைத் துளி மலைமீதுபட்டு அவள் வயிற்றில் பட்டது.
அது குழந்தைக்கு தக்கபலம் கொடுத்ததால்தான் இரணியன் மகன் பிரகலாதனுக்கு சக்தி கிடைத்தது.
கிரிவலம் செல்ல நினைத்து ஓர் அடி எடுத்து வைத்தால்
முதல் அடிக்கு ஒரு யாகம் செய்த பலன் கிடைக்கும்.
இரண்டாம் அடிக்கு ராஜசூய யாகம் செய்த பலனும்,
மூன்றாம் அடிக்கு அனைத்து யாகங்களையும் செய்த பலனும் கிட்டும்.
திருவண்ணாமலை என உச்சரித்தாலே ஐந்தெழுத்தை மூன்று கோடி முறை உச்சரித்த பலன் கிட்டும்.
மகாதீப தரிசனம் கண்டால், அவர்களின் 21 தலை முறையினருக்கும் புண்ணியம் கிட்டும்.
கிரிவலப் பாதையிலுள்ள இடுக்குப் பிள்ளையார் சந்நிதிக்கு மூன்று வாயில்கள்- நேர்க்கோட்டில் இருக்காது.
இதன்வழியே படுத்துநெளிந்து, வளைந்துதான் வெளிவர வேண்டும்.
இதனால் குழந்தைப்பேறு கிட்டும்;
கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.
மலையின் கிழக்கே இந்திரலிங்கம்,
தென் கிழக்கே அக்னிலிங்கம்,
தெற்கே எமலிங்கம்,
தென்மேற்கே நிருதிலிங்கம்,
மேற்கே வருணலிங்கம்,
வடமேற்கே வாயுலிங்கம்,
வடக்கே குபேரலிங்கம்,
வடகிழக்கே ஈசான்ய லிங்கம் அமைந்துள்ளன.
இந்த எட்டு லிங்க தரிசனம் முடிக்கவும் கிரிவலமும் முடிந்துவிடும்.
பாவம் போக்கும் அண்ணாமலை திருப்பாதம்!
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது ஆன்றோர் வாக்கு.
அதைப்போன்றே இறைவனின் திருப்பாத தரிசனம் நமது முற்பிறவி பாவங்களை எல்லாம் தீர்க்கும் என்பது ஐதீகம்.
திருஅண்ணாமலையார் கோயிலில் அண்ணாமலையார் பாதம் அமைந்துள்ளது.
கோயிலுக்கு உள்ளே பே கோபுரத்துக்கு வலது புறத்தில் அண்ணாமலையார் பாதம் உள்ளது.
அடி முடி காணாத பரம் பொருளின் பாத தரிசனம் காண வேண்டி அடியார்களும்,
அருளாளர்களும் மேற்கொண்ட கடும் தவத்தின் பயனாக விஸ்வரூப மூர்த்தியாக அண்ணாமலையார் எழுந்தருளிய இடத்தில் அமைந்துள்ளதே திருப்பாதம்.
அண்ணாமலையார் பாதம் தனி சன்னதியாக அமைந்துள்ளது.
கோயிலில் தரிசனம் செய்யும் பக்தர்கள் தவறாமல் பாத தரிசனம் செய்வது நன்மை தரும்.
பாத தரிசன சன்னதியில் தினமும் மலர் அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.
பாதத்தை சுற்றியுள்ள தூண்களில் விநாயகர், முருகர், கோதண்டராமர், சக்திதேவியின் திருவடிவங்கள் காட்சி தருகின்றன.
மேலும் மலை உச்சியிலும் அண்ணாமலையாரின் திருப்பாதம் அமைந்திருக்கிறது.
தீபம் ஏற்றப்படும் மலை உச்சியின் வலது புறத்தில் பாத தரிசனத்தை நாம் காணலாம்.
திருவண்ணாமலையை தரிசித்து தவமிருந்து பேறு பெற்ற சித்தர்கள், மகான்கள், அருளாளர்கள் ஏராளம்.
அவர்களில்
இடைக்காட்டு சித்தர்,
அருணகிரிநாதர்,
ஈசான்ய ஞானதேசிகர்,
குரு நமச்சிவாயர்,
குகை நமச்சிவாயர்,
ரமணமகரிஷி,
தெய்வசிகாமணி தேசிகர்,
விருப்பாட்சிமுனிவர்,
சேஷாத்ரி சுவாமிகள்,
இசக்கிசாமியார்,
விசிறி சாமியார்,
அம்மணியம்மன்,
கணபதி சாஸ்திரி,
சடைசாமிகள்,
தண்டபாணி சுவாமி,
கண்ணாடி சாமியார்,
சடைச்சி அம்மாள்,
பத்ராசல சுவாமி,
சைவ எல்லப்பநாவலர்,
பாணி பத்தர் உள்ளிட்டவர்கள் முக்கியமானவர்கள்.
கார்த்திகை ஜோதி மகத்துவம்!
அண்ணாமலையார் தீபம் என்பது திருவிளக்கின் விஸ்வரூபம்.
தீபம் என்பது லட்சுமி தேவியின் வடிவத்தையும் (சுடர்),
சரஸ்வதி தேவியின் பிம்பத்தையும் (ஒளி),
பார்வதியின் சக்தியையும் (வெப்பம்) ஒன்றாக சேர்த்தது.
திருவிளக்கு தீபச்சுடரில் மூன்று தேவிகளின் வடிவத்தை காணும் அனைவரும் நற்கதி அடைவர் என்பது ஆன்றோர் மொழி.
எனவேதான் தீபம் என்றாலே விசேஷமாக கருதப்படுகிறது.
கார்த்திகை தீபத்தன்று தீபமேற்றி வழிபட்டால்,
சிவனின் அருளுடன்,
மூன்று தேவியரின் அருளும் சேர்ந்து கிடைக்கும்.
தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது.
இதன் அடிப்பாகத்தில்
பிரம்மா,
தண்டு பாகத்தில்
மகாவிஷ்ணு,
நெய், எண்ணெய்
நிறையுமிடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர்.
வேத புராணங்களும்கூட விளக்கேற்றுவதால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும் என்கின்றன.
எத்தனை எத்தனையோ அரசர்கள்,
கோயில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர்.
எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபட உயர்வான பலன் தரும் என்றாலும்,
கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும்,
இல்லத்தில் இருவேளைகளும் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.
தீபஜோதி வழிபாடானது இருள் போன்று நம்மை சூழ்ந்து நிற்கிற தடைகள்,
இடையூறுகளையும் ஏழரை சனி,
அஷ்டமச்சனி
போன்றவற்றால் ஏற்படக் கூடிய கெடுபலன்களையும் போக்கி ஒளிமயமான,
வளமான வாழ்வை அருளும் என்பது நம்பிக்கை.
சிவபெருமானே மலையாகி நிற்கும் அண்ணாமலையின் உச்சியில் மகாதீப வடிவில் காட்சி தரும் சிவபெருமானை வணங்கி வளமான வாழ்வு பெறுவோம்

பிரதோஷம். மொத்தம் 20 வித பிரதோசங்கள் உண்டு. அவற்றையும். அவற்றின் பலன்களையும் பார்ப்போம்.


பிரதோஷம். மொத்தம் 20 வித பிரதோசங்கள் உண்டு. அவற்றையும். அவற்றின் பலன்களையும் பார்ப்போம்.

1. தினசரி பிரதோஷம் :
தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப்பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு “முக்தி” நிச்சயம் ஆகும் என்கிறது நமது சாஸ்திரம்.

2. பட்சப் பிரதோஷம் :

அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே பட்சப் பிரதோஷம் ஆகும். இந்தத்திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு [பறவையோடு உள்ள அது சம்பந்தப்பட்ட லிங்கம் மைலாப்பூர், மயிலாடு துறை போல்] செய்வது உத்தமம் ஆகும்.

3. மாதப் பிரதோஷம் :

பவுர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறை காலத்தில், 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே மாதப் பிரதோஷம் ஆகும். இந்த திதியின் மாலை நேரத்தில் “பாணலிங்க” வழிபாடு [பல்வேறு லிங்க வகைகளில் பான லிங்கம் ஒரு வகை] செய்வது உத்தம பலனைத் தரும்.

4. நட்சத்திரப் பிரதோஷம் :

பிரதோஷ திதியாகிய “திரயோதசி திதி”யில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திர பிரதோஷம் ஆகும்.

5. பூரண பிரதோஷம் :

திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் பூரண பிரதோஷம் ஆகும். இந்தப் பிரதோஷத்தின் போது “சுயம்பு லிங்கத்தை”த் தரிசனம் செய்வது உத்தம பலனை தரும். பூரண பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் இரட்டைப் பலனை அடைவார்கள்.

6. திவ்யப் பிரதோஷம் :

பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது “திவ்யப் பிரதோஷம்” ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை செய்தால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும்.

7.தீபப் பிரதோஷம் :

பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபட சொந்த வீடு அமையும்.

8.அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் :

வானத்தில் “வ” வடிவில் தெரியும் நட்சத்திர கூட்டங்களே, “சப்தரிஷி மண்டலம்” ஆகும். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வானில் தெளிவாகத் தெரியும். இந்த மாதங்களில் திரயோதசி திதியில் முறையாக பிரதோஷ வழிபாடு செய்து, சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து வழிபடுவதே அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் ஆகும். இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கும் ஈசன் தரம் பார்க்காது அருள் புரிவான்.

9. மகா பிரதோஷம் :

ஈசன் விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம், சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் “மகா பிரதோஷம்” ஆகும். இந்த மகா பிரதோஷத்து அன்று எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது மிகவும் உத்தமம் ஆகும்.

குறிப்பாக திருக்கடையூர், சென்னை வேளச்சேரியில் உள்ள, “தண்டீசுவர ஆலயம்”. திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகே உள்ள “திருப்பைஞ்ஞீலி” சிவ ஆலயம், குடவாசலில் இருந்து நன்னிலம் செல்லும் பாதையில் உள்ள “ஸ்ரீவாஞ்சியம்” சிவ ஆலயம், கும்ப கோணம் முதல் கதிராமங்கலம் சாலையில் உள்ள “திருக்கோடி காவல்” சிவ ஆலயம் ஆகியவை குறிப்பிடத்தக்கனவாகும். மாசி மாதம் வரும் மகா சிவராத்திரிக்கு முன்னால் வரும் பிரதோஷமும், “மகா பிரதோஷம்” எனப்படும்.

10. உத்தம மகா பிரதோஷம் :

சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் ஆகும். இது மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்ற தினமாகும்.

11. ஏகாட்சர பிரதோஷம் :

வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை `ஏகாட்சர பிரதோஷம்’ என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று, `ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ, அத்தனை முறை ஓதுங்கள். பின், விநாயகரையும் வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினால் பல விதமான நன்மைகள் ஏற்படும்.

12. அர்த்தநாரி பிரதோஷம் :

வருடத்தில் இரண்டு முறை மகாபிரதோஷம் வந்தால் அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அந்த நாளில் சிவாலயம் சென்று வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர்வார்கள்.

13. திரிகரண பிரதோஷம் :

வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வந்தால் அது திரிகரண பிரதோஷம். இதை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும். பிரதோஷ வழிபாடு முடிந்ததும் அஷ்ட லட்சுமிகளுக்கும் பூஜை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

14. பிரம்மப் பிரதோஷம் :

ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது பிரம்மப் பிரதோஷம். இந்தப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவம் நீங்கி, தோஷம் நீங்கி நன்மைகளை அடையலாம்.

15. அட்சரப் பிரதோஷம் :

வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம். தாருகா வனத்து ரிஷிகள். `நான்’ என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார். தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர்.

16. கந்தப் பிரதோஷம் :

சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம். இது முருகப் பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்ட பிரதோஷ வழிபாடு. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் கிட்டும்.

17. சட்ஜ பிரபா பிரதோஷம் :

ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, `சட்ஜ பிரபா பிரதோஷம்’. தேவகியும் வசு தேவரும் கம்சனால் சிறையிடப்பட்டனர். ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்றான். எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால், கிருஷ்ணர் பிறந்தார். நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம்.

18. அஷ்ட திக் பிரதோஷம் :

ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.

19. நவக்கிரகப் பிரதோஷம் :

ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது நவக்கிரகப் பிரதோஷம். இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக் கிரகங்களின் அருளும் கிடைக்கும்.

20. துத்தப் பிரதோஷம் :

அரிதிலும் அரிது பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது. அந்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் பிறவி குறைபாடுகள் கூட சரியாகும்.

இன்று மாலை அடியேன். சென்னையில் இதுவரை தரிசிக்காத ஒரு 2, 3 ஞானியர் அதிச்டானங்களை தரிசிக்கலாம் என்று இருக்கிறேன்.

தென்னாடுடைய சிவனே போற்றி, என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.