Sunday, September 28, 2014

சிவபுரம்_நினைவோம்‬

லக்ஷ்மி கடாக்ஷம் இருக்கும் இடத்தில் சரஸ்வதி கடாக்ஷம் இருப்பது மிகவும் அரிது என்பார்கள். ஏழ்மையில் வாடிய புலவர்கள் ஏராளம். வெற்றித்திருமகள் இருக்கும் இடத்திலும் இப்படித்தான். ஆனால் இந்த மூன்று தேவியர்களின் அருளும் ஒரே இடத்தில் இருக்கும்படியாகச் செய்யும் சிவத்தலம் சிவபுரம் என்பது. கும்பகோணத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள சாக்கோட்டை என்ற ஊரிலிருந்து 2 கி.மீ. தூரம் சென்றால் திருக்கோயிலை அடையலாம்.
சிவபுரத்தை மனத்தால் நினைத்தாலே, அலைமகள்,கலைமகள், மலைமகள் ஆகிய மூன்று தேவியர்களின் அருளும் கிடைத்துவிடும் என்கிறார் சம்பந்தர். “ “சிவபுர நினைபவர் திருமகளோடு திகழ்வரே” என்றும், “சிவபுர நினைபவர் கலைமகள் தர நிகழ்வரே” என்றும், “சிவபுரமது நினைபவர் செயமகள் தலைவரே” என்றும் கூறுவதால் அறியலாம். அது மட்டுமல்ல. நமது இடர்களைக் களைய வல்ல தலமும் இது. இந்தப் பிறவியில் எதிர்ப்படும் துன்பங்களை மட்டுமல்ல. அடுத்த பிறவியில் வரக்கூடிய துன்பங்களையும் நீக்கும் அருள் மிகுந்த தலமாக இது விளங்குவதை, “இருமையும் இடர் கெடுமே” என்பார் ஞானசம்பந்தர்.
"மறையவன் மதியவன் மலையவன் நிலையவன்
நிறையவன் உமையவள் மகிழ் நட(ம்) நவில்பவன்
இறையவன் இமையவர் பணிகொடு சிவபுரம்
உறைவென உடையவன் எமை உடையவனே."
என்பது அந்த அருந்தமிழ்ப் பாடல்.
திருமால் வெள்ளைப் பன்றியாகப் பலகாலம் சிவபூஜை செய்த அருமையான தலம் இது. இச்செய்தியை ஆச்சார்ய மூர்த்திகள் இருவரும் தம் பதிகங்களில் குறிப்பிடுகின்றனர். எடுத்துக்காட்டாக, அப்பர் பெருமானது திருப்பாடலை இங்கு சிந்திப்போமாக.
சிவபெருமானே அனைத்திற்கும் ஆதாரமாக விளங்குகின்றான். நிலமாகவும்,நிலத்தில் விளையும் பயிராகவும்,அப்பயிருக்குக் காரணமான நீராகவும், நீரை (கங்கையை) ஏற்கும் சடையை உடையவனாகவும், செங்கோல் வேந்தன் என்று மக்கள் புகழ்வதையே பரிசாகக் கொள்ளும் அரசனுக்கு அப்பெயர் விளங்கக் காரணமாகவும், பிறைபோன்ற கோரப்பல் உடைய வெள்ளைப்பன்றி வடிவில் திருமால் பலகாலம் பிரியாமல் வழிபட்ட பெருமையை உடையவனாகவும், தேவர்களுக்கெல்லாம் தேவனாகவும் சிவன் எனவும் அப்பெருமான் விளங்குகின்றான். இப்படிச் சொல்லும் அப்பரின் திருத்தாண்டகத்தை இப்போது முழுவதும் காண்போம்:
"பாரவன் காண் பாரதனில் பயிர் ஆனான் காண்
பயிர் வளர்க்கும் துளியவன் காண் துளியில் நின்ற
நீரவன் காண் நீர் சடை மேல் நிகழ்வித்தான் காண்
நிலவேந்தர் பரிசாக நினைவுற்று ஓங்கும்
பேரவன் காண் பிறை எயிற்று வெள்ளைப்பன்றி
பிரியாது என்றும் வழிபட்டு ஏத்தும்
சீரவன் காண் சீருடைய தேவர்க்கெல்லாம்
சிவனவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே"
ஆர்யாம்பிகையும் சிவகுருநாதரும் அருள் வழங்கும் சிவபுரத்தைத் தரிசித்து நலம் யாவும் பெறுவோமாக.
"திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''

வருடத்திற்கு ஒருமுறையாவது உங்களது பிறந்த நட்சத்திர ஸ்தலத்திற்கு உங்களின் நட்சத்திரம் வரும் நாளன்று சென்று வளம் பெறுங்கள்...

வருடத்திற்கு ஒருமுறையாவது உங்களது பிறந்த நட்சத்திர ஸ்தலத்திற்கு உங்களின் நட்சத்திரம் வரும் நாளன்று சென்று வளம் பெறுங்கள்...
அஸ்வினி - முக்கிய ஸ்தலம் - கூத்தனூர
மற்ற தலங்கள் - ஸ்ரீரங்கம், திருத்துறைபூண்டி, கொல்லிமலை.
பரணி - முக்கிய ஸ்தலம் - நல்லாடை
மற்ற தலங்கள் - திருநெல்லிக்கா, கீழப்பறையார், பழனி, பட்டீஸ்வரம், திருத்தங்கல், திருவாஞ்சியம்.
கார்த்திகை - முக்கிய ஸ்தலம் - கஞ்சானகரம்
மற்ற தலங்கள் - காஞ்சிபுரம், திருப்புகலூர், கீரனூர், திருச்செந்தூர், திருவொற்றியூர், கானாட்டுமுள்ளூர்.
ரோஹிணி - முக்கிய ஸ்தலம் - திருக்கண்ணமங்கை
மற்ற தலங்கள் - காஞ்சிபுரம், திருவானைக்கோவில், ஜம்பை, கழுகுமலை, செம்பாக்கம், கொரட்டூர், நெல்லிச்சேரி, மன்னார்குடி, பெருமாள் அகரம், திருவரங்கம், திருக்கண்ணபுரம், திருக்கண்ணங்குடி.
மிருகசீரிடம் - முக்கிய ஸ்தலம் - எண்கண்
மற்ற தலங்கள் - அம்பர் மாகாளம், ஓசூர், முசிறி, தாழமங்கை.
திருவாதிரை - முக்கிய ஸ்தலம் - சேங்காலிபுரம்
மற்ற தலங்கள் - சிதம்பரம், அதிராம்பட்டினம்.
புனர்பூசம் - முக்கிய ஸ்தலம் - சீர்காழி
மற்ற தலங்கள் - பழைய வாணியம்பாடி, திருவள்ளூர், திருநெல்வேலி, திருப்பாசூர், திருவெண்ணெய்நல்லூர்.
பூசம் - முக்கிய ஸ்தலம் - திருச்சேறை
மற்ற தலங்கள் - விளங்குளம், ஒழுந்தியாபட்டு, ஆவூர், கோனேரிராஜபுரம், பரிதிநியமம், திருச்சுழி, அழகர் கோயில்.
ஆயில்யம் - முக்கிய ஸ்தலம் - திருப்புறம்பியம்
மற்ற தலங்கள் - திருந்துதேவன்குடி, நண்டான் கோயில், சங்கரன்கோயில், திருப்புனவாசல், புள்ளபூதக்குடி, திருவிடந்தை.
மகம் - முக்கிய ஸ்தலம் - திருவெண்காடு
மற்ற தலங்கள் - திருக்கச்சூர், திருவரத்துறை, கீழப்பழுவூர், ஆலம்பொழில், அன்பில், திருவாலங்காடு.
பூரம் - முக்கிய ஸ்தலம் - தலைசங்காடு
மற்ற தலங்கள் - நாலூர், கஞ்சனூர், திருவரங்குளம், புரசைவாக்கம்.
உத்திரம் - முக்கிய ஸ்தலம் - கரவீரம்
மற்ற தலங்கள் - காஞ்சிபுரம், திருவக்கரை, செய்யூர், கூவத்தூர், மயிலாடுதுறை, இடையாற்றுமங்கலம்.
ஹஸ்தம் - முக்கிய ஸ்தலம் - கோமல்
மற்ற தலங்கள் - தர்மபுரி, செய்யாறு, புவனகிரி, ஏமப்பூர் , எழிலூர், திருவாதவூர், திருவேற்காடு.
சித்திரை - முக்கிய ஸ்தலம் - திருவையாறு
மற்ற தலங்கள் - அண்ணன்கோயில், தாடிக்கொம்பு, திருநாரயணபுரம், நாச்சியார் கோயில், திருவல்லம், திருவக்கரை, திருக்கோயிலூர், திருமாற்பேறு.
சுவாதி - முக்கிய ஸ்தலம் - திருவிடைமருதூர்
மற்ற தலங்கள் - திருப்புடைமருதூர், பெரியதிருக்கோணம், கடத்தூர், பிள்ளையார்பட்டி, நயினார் கோயில், ஸ்ரீரங்கம்.
விசாகம் - முக்கிய ஸ்தலம் - கபிஸ்தலம்
மற்ற தலங்கள் - திருமலைக்கோயில், அத்தாளநல்லூர், தீயத்தூர், திருநன்றியூர், நத்தம்.
அனுஷம் - முக்கிய ஸ்தலம் - நாச்சியார் கோயில்
மற்ற தலங்கள் - திருவொற்றியூர், திருவண்ணாமலை, திருப்புனவாசல், திருக்கண்ணமங்கை, நீடூர், திருநன்றியூர்.
கேட்டை - முக்கிய ஸ்தலம் - வழுவூர்
மற்ற தலங்கள் - பிச்சாண்டார் கோயில், பசுபதி கோயில், பல்லடம், திருப்பராய்த்துறை.
மூலம் - முக்கிய ஸ்தலம் - மயிலாடுதுறை
மற்ற தலங்கள் - மாந்துறை, ஆச்சாள்புரம், பாமணி, கோயிலூர், குலசேகரப்பட்டினம், பொழிச்சலூர், மம்பேடு.
பூராடம் - முக்கிய ஸ்தலம் - கடுவெளி
மற்ற தலங்கள் - நகர், சிதம்பரம், இரும்பை மகாகாளம்.
உத்திராடம் - முக்கிய ஸ்தலம் - இன்னம்பூர்
மற்ற தலங்கள் - கோயம்பேடு, காங்கேயநல்லூர், பேளூர், கீழ்பூங்குடி, திருப்பூவனூர், திருக்கடிக்குளம், திருப்பூவணம், திருக்கோஷ்டியூர், திருக்குற்றாலம்.
திருவோணம் - முக்கிய ஸ்தலம் - திருவிடைமருதூர்.
மற்ற தலங்கள் - ராஜேந்திரப்பட்டினம், திருமுல்லைவாயில், திருப்பாற்கடல்.
அவிட்டம் - முக்கிய ஸ்தலம் - திருபூந்துருத்தி
மற்ற தலங்கள் - விருதாச்சலம், திருவான்மியூர், திருக்காட்டுப்பள்ளி, திருகொள்ளிக்காடு, திருமறைக்காடு, கொடுமுடி.
சதயம் - முக்கிய ஸ்தலம் - திருப்புகலூர்
மற்ற தலங்கள் - கடம்பனூர், கோயில் கடம்பனூர், ஆதி கடம்பனூர், இளங்கடம்பனூர், வாழிக்கடம்பனூர், பெருங்கடம்பனூர், கடம்பர் கோயில், மேலக்கடம்பூர் , பிச்சாண்டார் கோயில், மதுரை.
பூரட்டாதி - முக்கிய ஸ்தலம் - திருக்குவளை
மற்ற தலங்கள் - ரெங்கநாதபுரம்.
உத்திரட்டாதி - முக்கிய ஸ்தலம் - திருநாங்கூர்.
மற்ற தலங்கள் - தீயாத்தூர், வைத்தீஸ்வரன் கோயில்.
ரேவதி - முக்கிய ஸ்தலம் - இலுப்பைப்பட்டு
மற்ற தலங்கள் - காருகுடி, இரும்பை மாகாளம், திருச்செங்கோடு.

விநாயகருக்கு அர்ச்சனையும் பலனும்..

விநாயகருக்கு அர்ச்சனையும் பலனும்..
1. மாவிலை - அறம், நீதி காக்க
2. கரிசலாங்கன்னி - வாழ்க்கைக்கு தேவையான பொருள் கிடைக்க
3. வில்வம் - இன்பம் அடைய
4. அருகம்புல் - சகல பாக்யங்களும் பெற
5. இலந்தை - கல்வி ஞானம் பெற
6. ஊமத்தை - பெருந்தன்மை உயர
7. வன்னி - இந்த பிறப்பிலும் அடுத்த பிறப்பிலும் நன்மை அடைய
8. நாயுருவி - வசீகரம் உண்டாக
9. கண்டங்கத்திரி - வீரம் உண்டாக
10. அரளி - எடுக்கும் காரியங்கள் வெற்றி பெற
11. அரசு - உயர் பதவி கௌரவம் அடைய
12. எருக்கு - வம்ச விருத்தி அடைய
13. மருதம் - குழந்தை பேறு அடைய
14. துளசி - கூர்மையான அறிவினை பெற
15. மாதுளை - பெரும் புகழ் அடைய
16. தேவதாரு - எதையும் தாங்கும் வலிமை பெற
17. மரிக்கொழுந்து - இல்லற சுகம் பெற
18. ஜாதி மல்லி - சொந்த வீடு பூமி பாக்கியம் பெற
19. நெல்லி - செல்வ செழிப்பு உண்டாக
20. அகத்திக்கீரை - கடன் தொல்லையில் இருந்து விடுபட
21. தவனம் - திருமண தடை விலகி நல்வாழ்வு கிட்ட.
விநாயக பெருமானுக்கு இந்த 21 விதமான அர்ச்சனையும் செய்து வந்தால் நம் வினைகள் எல்லாம் நீங்கி நல்வாழ்வு பெறலாம்.
...

அருள்மிகு திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் திருக்கோயில்

அருள்மிகு திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் திருக்கோயில்
திருச்சி என்றாலே மலைக்கோட்டை அதன் அருகில் அகண்டகாவிரி, அடுத்து ஸ்ரீரங்கம். இப்புனித தலத்தை உலகம் முழுவதும் இருந்து வரும் மக்கள் அனைவரும் தினமும் கண்டு களித்து வருகின்றனர் என்பது அனைவரும் கண்ணால் காணக்கூடிய உண்மை. அப்பர், ஞான சம்பந்தர், மாணிக்கவாசகர், தாயுமான அடிகள் ஆகியோரால் பாடல் பெற்ற இக்கோயிலின் கட்டுமானப்பணி மிகவும் வியப்பிற்குரியது.இக்கோயிலில் குடைந்தெடுக்கப்பட்ட இரண்டு குகைகள் உள்ளன. மேல் குகையில் கிரந்தத்திலும், தமிழிலும் கல்வெட்டு செய்திகள் உள்ளன. கீழ் குகையில் 104 செய்யுள்கள் அந்தாதியாக உள்ளன.
மகாவிஷ்ணு ராமாவதாரத்தில், ராவணனை வதைத்து சீதையை மீட்டு அயோத்தி சென்றார். விபீஷணன், சுக்ரீவன் மற்றும் அனுமன் ஆகியோரும் உடன் சென்றனர்.அயோத்தியில் ராமர் பட்டாபிஷேகம் முடிந்து, அவரிடம் விடைபெற்று கொண்டு திரும்புகையில், நினைவுப்பரிசாக ரங்கநாதர் சிலையை பெற்றுக் கொண்டு விபீஷணன் தெற்கே வந்தான்.எழில் வனப்புடன் மிகுந்த சோலை நடுவே அகண்ட காவிரியில் சற்று ஓய்வெடுக்க எண்ணிணான். அப்போது, அங்கு சிறுவன் உருவில் நின்று கொண்டிருந்த விநாயகரிடம் ரங்கநாதர் சிலையை சிறிது நேரம் வைத்திருக்குமாறு கொடுத்து விட்டு சென்றான். விநாயகர் சிறிது நேரம் பார்த்து விட்டு அச்சிலையை பூமியில் வைத்து விட்டு அருகில் இருந்த மலையில் போய் அமர்ந்து கொண்டார்.திரும்பி வந்து வீபிஷணன் சிறுவனைக் காணாமல் மலைத்து போனான். செய்வதறியாது பூமியில் இருந்த சிலையை எடுக்கப்பார்த்தும் அவனால் சிலையை நகர்த்த முடியவில்லை. இதனால் இலங்கைக்கு செல்ல இருந்த ரங்கநாதர், விநாயகரின் அருளால் ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளினார்.தான் சிலையை கொடுத்த அந்த சிறுவன் மலையில் அமர்ந்திருப்பதை பார்த்த வீபிஷணன் கோபமடைந்து, விநாயகர் தலையில் ஒரு குட்டு வைத்தான்என்பது வரலாறு.உச்சிப்பிள்ளையார் தலையில் இன்றும் அந்த குட்டின் வடு காட்சியளிக்கிறது. இப்படி சிறப்பு வாய்ந்த விநாயகர் தான் தமிழகத்தின் நலன் காக்க அருகில் அமைந்துள்ள ரங்கநாதருடன் ஆண்டாண்டு காலமாய் ஆட்சி செய்து வருகிறார்.

Saturday, September 27, 2014

நலம் தரும் நாட்கள்

நலம் தரும் நாட்கள்

நாளைய நாட்கள் நலமிக்கவைதானா அல்லது நலமிழந்த நாட்களா என்பதை கணிக்கும் இலக்கண அரிச்சுவடிதான் ஜோதிடக்கலை. 

இதை அனைவரும் அறிந்திருந்தாலும் அதிலும் எங்கனம் அவற்றின் அளவை செய்வது என்பது அரிதான வித்தைதான். ஏனெனில் ஏணிப்படி சிறிது வழுக்கினாலும் எட்டி பிடிக்க வேண்டிய இடம் தடுமாறிவிடும், தடமாறிவிடும்.

ஒருவர் சிம்ம லக்னமாக அமைந்து சூரியன் ரிஷபத்தில் நின்று சந்திரனோடு கூடி அமாவாசையாக, செவ்வாயும் கூடி விட்டால் எத்தனை கிரகங்கள் இமயமென உயர்ந்து இருந்தாலும், நாட்கள் நலம் ஆக்குவதில்லை. நலம் தருவது போல் தோன்றி ஏமாற்றிவிடும்.

அதே போன்று விருச்சிகத்தில் சந்திரனும் கடகத்தில் செவ்வாயும் மேஷத்தில் சனியும் நின்று நீச்ச நிலையை உயர்ந்துவிடில் வேறு என்ன கிரகங்கள் நல்ல நிலையில் இருந்தாலும் நல்லது நடக்காது.

எப்போதும் இடைவிடாத பினித்தொல்லை, எவரையும் பார்த்து அச்சம் கொள்ளும் நிலை என்று அல்லல் பட வைக்குமே தவிர ஆனந்த பட வைக்காது.


மூன்று  கிரகங்களும் அதற்கு மேலும் நீச்சமடைந்திடில் அந்த ஜாதகர் தத்தி தத்திதான் வாழ்வை மற்றவர் தயவால் நடத்தி செல்லும் நிலை ஏற்படும்.

அதிலும் செவ்வாய் சூரியனோடு இணைந்து இதில் ஓன்று நீச்சமடைந்திடில், இவர்களோடு புதனும் சேர்ந்து இருந்தால் தீய பழக்கங்கள் தலை எடுத்து அதில் இருந்து மீள முடியாத அடிமையாகிவிடும்.

மூன்று கிரகங்கள் உச்சம் அடைந்தால், அவர் என்னதான் இழிதான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் உயர்வான வாழ்க்கையை அடைவது உறுதி. ஆனால் மற்றைய கிரகங்கள் நிச்சமடையாமல் இருக்க வேண்டும்.


சிலருக்கு இரண்டு மூன்று கிரகங்கள் நீச்சமுற்ற நிலையில் இருக்கும் போது, சிம்ம லக்னத்தில் உதித்து சூரியன் உச்சமானால் விசித்திரமான குணம் உடையவர்கள்.

அடங்கா கோபம், யாரையும் துச்சமாக நினைக்கும் சுபாவம், அலசிய போக்கு கொண்டவர்கள்.மற்றவர் பார்த்து பேசிய சில நிமிடங்களில் இவரின் அடங்கா குணத்தை பார்த்து விலகி விடுவார்கள்.

அதே போன்று 7 இல் செவ்வாயும் சுக்கிரனும் இருக்க பெற்றவர்கள் இழிவான நடத்தை கொண்டவர்களாக இருப்பார்கள்.


இவர்களின் நல்ல நாட்கள் எது என்று கேட்டால் அவர்கள் சுதந்திரமாக அநீதி வழி அலையும் நாட்களே ஆனந்தம் என்பார்கள்.

கடக லக்கனத்தில் பிறந்து அங்கேயே குருவும் சந்திரனும் இணைந்து நிற்கிற நிலைமை ஏற்பட்டால், இந்த உலகத்தில் மிக உயர்வான நிலை என்று சொல்லாலாம்.

ராமபிரானுக்கு அந்த அமைப்பு என்று புராணங்கள் சொல்கின்றன.

எனவே..இனிய நாட்கள் அவரவர் கிரக நிலையை பொறுத்து உருவெடுக்கும்.  எனவே லக்னத்தையோ சந்திரனையோ குரு பார்வையையோ, அல்லது இணைவோ ஏற்பட வேண்டும்.

அந்த குரு உச்சம் பெற்று இருக்கா விட்டாலும் நீச்சமடைந்து இருக்க கூடாது. 

பெண் இனத்தாருக்கு கடகத்தில் சனியோ, ராகு கேது செவ்வாய் ஆகிய தீய கிரகங்கள் நின்றிடில் வாழ்வில் எந்த சூழலிலாவது அவஸ்தைகள், அவமானங்கள், அல்லல் தொல்லைகள் என்று இருந்தே தீரும்.

சாதாரணமாக புதனும் குருவும் பரிவர்த்தனை நிலை ஏற்பட்டால் குறைபட்ட குசந்தைகள் பிறப்பார்கள் என்கிறது சாஸ்த்திரம்.

இவ்விதம் கணவன் மனைவிக்கும் இருந்தால் நிச்சயமாக உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி குறைவான குழந்தைகள் பிறந்தே தீரும். 

அந்த நிலைபட்டவர்கள் விவாகத்திற்கு முன்பே அவ்வித நிலை இல்லாதவரை மணந்தால் ஒருவாறு தப்பிக்கலாம்.


அதே போன்று குழந்தைகள் பிறக்கும் சமயம் சுக பிரசவமா அல்லது அறுவை சிகிச்சையா என்பதை கூட ஜாதகத்தை பார்த்து சொல்லிவிடலாம்.

லக்கனத்தில் செவ்வாய், சனி, ராகு, கேது போன்றவை வலுவுடன் இருந்தால் சுகபிரசவமாக இருக்காது.


அதே போன்று லக்னத்திற்கு 8 லோ, அல்லது சந்திரனுக்கு 8 லோ மூன்று கிரகங்கள் இருந்தால் அந்த குழந்தை ஒரு வருடத்தை தாண்டாது. ஆனால் குரு பார்வை இருந்தால் தப்பிக்கலாம்.

பெண்கள் ஜாதகத்தில் 5 அல்லது 9 இடத்தில் இருந்தால் சனி செவ்வாய் ராகு கேது இவற்றில் 2  அல்லது 2 க்கு மேற்பட்ட கிரகங்கள் இருந்தால் பிரசவம் சுகமாக ஏற்படாது.

ஸ்ரீமத் ஜெயவீரதேவா 

வழிக்கு கொண்டு வரும் வசிய முறைகள்

வழிக்கு கொண்டு வரும் வசிய முறைகள்


வசி வசி என்று தினம் செபித்தாயானால் மகத்தான சகல பாக்கியமும் உண்டாகும் என்றார்கள் நம் சித்தர்கள். 

வசியம் என்பதே வலிமை வாய்ந்த ஒரு மாய சொல்லாகும். இந்த சொல் யாரை எல்லாம் ஆட்டி படைக்கிறது  என்று பார்ப்போம். 

நம் வாழ்க்கையில் பல்வேறு நிலைகளில் மற்றவர்கள் மீது அன்பு செலுத்துகிறோம். அந்த அன்பு அங்கே அடிபட்டு போகிறபோது, சிலர் குறுக்கு வழியில் கையில் எடுப்பதுதான் இந்த வசியம்.

ஒரு தாய் தன் மகன் மீது அன்பு செலுத்துகிறாள். அந்த அன்புக்கு போட்டியாக மருமகள் என்பவள் வந்து தன்னை உதாசீன படுத்தும்போது அவர்கள் இருவரையும் தன் கட்டுக்குள் கொண்டுவர அவள் கையில் கொண்டு வரும் ஆயுதம்தான் இந்த வசியம்.

கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணின் மைந்தருக்கு மாமலையும் கடுகளவாம் என்கிறார் பாரதிதாசன். 

அந்த கடை கண் பார்வை தனக்கு கிடைக்காத போது, அந்த இளைஞனின் கண்ணில் படுவதுதான் இந்த வசியம் என்கிற போர் ஆயுதம்.

ஒரு பெண் தன் கணவன் மீது மாறாத அன்பு வைத்திருக்கிறாள். அவனுக்கு வேறு தொடர்பு ஏற்பட்டு தானும் தன் குடும்பமும் சீரழிக்கப்படும் போது, என்ன விலை கொடுத்தாவது அவனை தன் வழிக்குள் கொண்டுவர அவள் கையில் எடுக்கும் ஆயுதம்தான் இந்த வசியம் என்ற A .K .47 .

பங்காளி பழிஎடுப்பான் என்பார்கள். பங்காளியால் மட்டும் அல்ல, மற்ற எதிரிகள் தொல்லையாலும், பாதிக்கபடுகிற பொழுது மனதளவில் பாதிக்க படுகிற போது, அவர்களை அழிக்க தங்கள் கையில் ஏந்துகிற ஒரு வெடிகுண்டு தான் இந்த வசியம்.

தம்முடைய ஆளுமை தன்மை குறைகிற பொழுது மற்றவர்களை தன் ஆளுமையின் கீழ் கொண்டு வருவதற்கான ஒரு மறைமுக  முயற்சியே இந்த வசியம் எனப்படும்.

இதை அத்தனை பேருமே கடைபிடிக்கிறார்கள் என்று சொல்வதற்கில்லை. அதுபோன்ற குறுக்கு வழிகளை நாடி, அதனால் நன்மையோ அல்லது தீமையோ பெறவேண்டும் என்கிற விதியமைப்பு இருக்கிற நபர்கள் மட்டுமே அந்த பக்கம் போகிறார்கள். 

நம் சித்தர் பெருமக்கள் எட்டு விதமான தொழில்களை பற்றி கூறி உள்ளார்கள். இதை அஷ்டகர்மம் என்பர். இவைகளில் ஒன்றுதான் வசியம்.

இனி இதை பற்றி ஆய்வினை தொடங்குவோம். சித்தர்கள் வசியத்தை உலக வசியம், அரசர் வசியம், பெண்டிர் வசியம், மைந்தர் வசியம், பகைவர் வசியம், விலங்கு வசியம் என்று ஆறு வகையாக பிரித்துள்ளனர். 

உலகம், பகைவர் மற்றும் விலங்கு வசியத்திற்கு ஓம் என்ற அட்ச்சரதையும், அரசர் வசியத்திற்கு ஒளம் என்ற அட்ச்சரதையும், மாதர் மற்றும் மைந்தர் வசியத்திற்கு ஐம் என்ற அட்ச்சரதையும் பயன்படுத்தி உள்ளனர். 

வசியத்தை நடைமுறை  வாழ்க்கையில் பயன்படுத்தும் பொழுது 

1 . மந்திரம்
2 . யந்திரம் அல்லது சக்கரம்.
3 . மூலிகை
4 . அஞ்சனம் அல்லது மை என்ற நான்கு நிலைகளில் செயலாற்றி உள்ளனர். இனி இவைகளை பற்றி ஆராய்வோம்.

மந்திரம் 

குற்றமற்ற மனிதர்களால் உருவாக்கப்பட்ட மறைமொழி என்ற பரிபாஷை சொற்களே மந்திரம் எனப்படும். 

வானலோகத்தில் இருக்கிற தேவர்களையும் அழைக்கிற சக்தி இந்த மந்திரத்திற்கு உண்டு. ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் செய்கிற ஆற்றல் மந்திர எழுத்துகளுக்கு உண்டு. 

நமது சித்தர்களும் நமசிவாய என்ற ஐந்தெழுத்தில் இந்த அண்டங்களும் அவற்றின் ரகசியங்களும் அடங்கி இருந்ததை அறிந்திருந்தார்கள். 

நாம் வழிபடுகிற பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளும் மறைந்திருந்ததையும் உணர்ந்து இருந்தார்கள். 

இந்த எழுத்துக்களையே மாற்றி மாற்றி அமைத்து எட்டு விதமான தொழில்களுக்கும் பயன் படுத்தி உள்ளனர்.

ஓம் ஹிரீம் ஐம் கிலீம் சங் வயநமசி என்பது வசியதிற்கான முலமந்திரமாகும். 

இதனை கிழக்கு நோக்கி அமர்ந்து மனதை ஒருநிலை படுத்தி ஒரு லட்சம் முறை செபித்தால் வசியம் சித்தியாகும் என்கிறார்கள் சித்தர்கள். 

கிழக்கு திசை என்பது இந்திரனுக்கு உரியது.  உலகியல் இன்பத்திற்கு உரிய தெய்வம் இந்திரன்.  

வசிய ஆற்றலைத்தான் இன்றைய  விஞ்ஞானம் மெஸ்மரிசம் என்று குறுப்பிடும். 

எந்த மந்திரத்தையும் மனதை ஒரு நிலை படுத்தி படிக்கும் போது நமது உடலில் மின்காந்த அலைகளின் சக்தி அதிகரிக்கும். இதை எலக்ட்ரோ மேக்னடிவ் வேவ்ஸ் என்று குறிப்பிடுவார்கள். 

தவவலிமை பெற்றவர்கள் தங்களின் ஆற்றலை எழுத்துக்கள் என்ற அட்சரங்கள் மூலம் தகடுகளில் பதித்து, அதற்க்கு வழிபாட்டின் மூலம் சக்தியை வழங்கி குறுப்பிட்ட காரியங்களுக்கு செயலாற்றும்படி செய்வது யந்திர முறையாகும். 

இந்த தகடுகள் வெள்ளியால் செய்யபட்டால் 22 வருடத்திற்கும், தாமிரம் என்ற செம்பினால் செய்யபட்டால் 12 வருடத்திற்கும், தங்கம் அல்லது பஞ்சலோகத்தால் செய்யபட்டால் ஆயுள் முழுமைக்கும் நன்மைதரும்.

இந்த யந்திர முறையை பல்வேறு சித்தர்கள் பல்வேறு முறைகளில் சொல்லி உள்ளனர். நாம் வசியம் என்ற ஒன்றை மட்டும் ஆராய்வோம்.


இந்த சக்கரத்திற்கு ஐங்காயம் பூசி, முல்லை மலர் அணிவித்து, வில்வமர பலகையின் மீது கிழக்கு நோக்கி அமர்ந்து ஓம் வசிமநய என்று லட்சம் முறை உச்சரிக்க வசியம் சித்தியாகும். இது ஒரு முறை.

எண் கரும சக்கரம் முதல் அறுபதிற்கும் மேற்பட்ட சக்கர வகைகள் கூறபட்டுள்ளன. இறைவன் அல்லது இறைவியை உருவமற்ற நிலையில் வழிபாடு செய்வதுதான் யந்திர முறையாகும். 

தவ ஆற்றல் மிக்கவர்களாலும், பற்றற்று வாழ்பவர்களும் தருகிற சக்கரங்கள் மட்டுமே நீண்ட காலம் பலன் தரும்.மற்றவர்களால் எழுதப்படும் எந்த சக்கரமும் ஒரு பலனையும் தராது.

தவநிலையில் மேம்பட்டவர்கள், தங்களின் பயணத்தை பேரின்பம் என்னும் முக்தி நிலையை நோக்கி தொடர்வார்களே தவிர, இது போன்ற காரியங்களில் தங்களின் கவனத்தை சிதற விட மாட்டார்கள். 

அப்படியானால் அச்சடித்த சக்கரங்கள்?

ஐயோ பாவம்..முறையாக உருவேற்றபடாத எந்த சக்கரத்திற்கும் சக்தி இல்லை. 

நீங்கள் ஏமாறவும் வேண்டாம், ஏமாற்று காரராகவும் மாற வேண்டாம். நீங்கள் நீங்களாகவே வாழ  முயற்சியுங்கள்.

Friday, September 26, 2014

நவராத்திரி

நவராத்திரி
சாக்த வழிபாடு என்பது சக்தியை, அம்பிகையை, அகிலாண்ட நாயகியை, அன்னை பராசக்தியை வழிபடும் பண்டிகைகளில் முக்கியமானது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் மிகச் சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாதான்.

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமை முதல் நவமி வரை மாலை வேளைகளில் அம்பிகையின் பல ரூபங்களை வழிபடுவது நவராத்திரி பூஜையாகும்.
நவமி அன்று சரஸ்வதி பூஜை. ஆயுத பூஜை என்றும் அழைக்கப்படும். நாம் செய்யும் செயல்கள், வித்தைகள் அனைத்திற்கும் அதிபதி சரஸ்வதி. ஆகவே அன்று வீட்டிலுள்ள கருவிகள், எழுதுகோல்கள், புத்தகங்கள் அனைத்தையும் அழகுற அமைத்து, சரஸ்வதி தேவியின் அருளைப் பெற வேண்டும் நிகழ்ச்சியாக நடைபெறும். அன்று அடுக்கிவைக்கப்பட்ட புத்தகங்கள் மற்றும் ஆயுதங்களை அன்றே உபயோகிக்காமல் மறுநாள் விஜயதசமி அன்று எடுக்கப்பட்டு உபயோகப்படுத்தப்படும்.

விஜய தசமி - வெற்றியைத் தரும் பத்தாம் நாள். பூஜிக்கப்பட்ட கருவிகள், எழுதுகோல்கள், புத்தகங்கள் அனைத்தும் எடுத்தாளப்படும். அன்று துவங்கப்படும் எந்தக் காரியமும் மிக வெற்றிகரமாக அமையும். அன்றுதான் குழந்தைகளுக்கு வித்யா உபதேசம் எனும் அக்ஷராப்யாசம் என்னும் கல்வி கற்கத் தொடங்க அற்புதமான நாளாக கொண்டாடுவார்கள்.

வீட்டில் பத்து நாட்கள் கொண்டாடப்படும் விழாவாக நவராத்திரி, தவிர வேறு விரத விழா இல்லை. வீட்டில் கொண்டாடப்படும் இந்த விழா வீடு என்ற கோயிலுக்கு ஒரு 'பிரம்மோற்சவம்' என்று கூட சொல்லாம்.
பெண்களின் பெருமையைப் போற்றும் விழா, நவராத்திரி விழா.
பெண்களின் கைவினைத்திறன், கற்பனை சக்தியைத் தூண்டும் விழா.

நவராத்திரி சமயத்தில் வீட்டில் "கொலு" என்னும் அமைப்பில், மூன்று, ஒன்பது அல்லது பனிரண்டு படிகள் அமைத்து, அதில் பல்வேறு வகையான பொம்மைகளை அமைத்து, அம்பிகையை அமைத்து, வழிபாட்டுடன், ஆடலும் பாடலுமாக வீடே சொர்க்க லோகம் போல காட்சியளிக்கும்.

நவராத்திரி வழிபாடு பெண்களுக்கே உரியது. எல்லா வயதுடைய, பருவத்தைச் சார்ந்த பெண்கள் நவராத்திரி வழிபாட்டில் ஈடுபடலாம்.

நவராத்திரி வழிபாட்டால்,
பெண் குழந்தைகள் பெறுவது மகிழ்ச்சியின் பயன்.
கன்னியர்கள் பெறுவது திருமணப் பயன்.
சுமங்கலிகள் பெறுவது மாங்கலயப் பயன்.
மூத்த சுமங்கலிகள் பெறுவது மனமகிழ்ச்சி, மன நிறைவு;
எல்லோரும் பெறுவது பரிபூரண திருப்தி.

நவராத்திரிகள் கொண்டாடப்படும் காலங்கள் :
சித்திரை மாதத்தில் வரும் ஒன்பது இரவுகள் வசந்த நவராத்திரி.
ஆஷாட நவராத்திரி ஆடி மாதத்தில் வரும் நவராத்திரியாகும்.
புரட்டாசி மாதத்தில் வரும் ஒன்பது இரவுகள் சாரதா நவராத்திரியாகும்.
தை மாதத்தில் கொண்டாடப்படும் நவராத்திரி சியாமளா நவராத்திரியாகும்.

புரட்டாசி மாத நவராத்திரி வழிபாடு :புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரியையே அனைவரும் வெகு விமரிசையாக கொண்டாடுகிறார்கள்.
புரட்டாசி மாதத்தினை சரத்காலம் என்று கூறுவர்.
இந்த சரத்காலத்தில் வரும் நவராத்திரியை சாரதா நவராத்திரி சிறப்பாக கொண்டாடுவார்கள். இந்த ஒன்பது நாட்களுடன் ஒரு நாளைச் கூடுதலாகச் சேர்த்து தசராவாகக் கொண்டாடப்படுகிறது. தசம் என்றால் பத்து அத்துடன் ஒரு இரவைச் சேர்த்து (தச+ரா) பத்துநாள் திருவிழாவாக கொண்டாடுகிறார்கள். மைசூரிலுள்ள சாமுண்டேஸ்வரி அம்பிகைக்கு சிறப்பாக விழா கொண்டாடப்படுகிறது.

சரத் காலத்தின் முக்கிய மாதமாகிய புரட்டாசி மாதத்தின் வளர் பிறையில் பிரதமை திதியில் ஆரம்பித்து ஒன்பது திதியுடன் பத்தாவது திதியான தசமி திதியடன் நிறைவுபெறுகிறது நவராத்திரி விழா.

நவராத்திரி விழா இரவு நேரத்தில் தான் பூஜை செய்யப்படும். இந்த பூஜை தேவர்கள் செய்யப்படுவதாக கருதப்பட்டு இரவில் நாவராத்திரியை வழிபடுவார்கள்.

தேவர்களுக்கு பகல் நேரமாக இருப்பது நமக்கு இரவு நேரமாகும். ஆகவே இரவு நேரத்தில் தான் நவராத்திரி கொண்டாடப்படுகிறது.

நவகன்னிகா வழிபாடு
நவராத்திரி என்பது ஒன்பது நாட்களிலும் இரண்டு முதல் ஒன்பது வயது வரையிலுள்ள சிறுமிகளை அம்பாளாக பாவித்து, வயது வரிசைப்படி, ஒரு நாளைக்கு ஒரு குழந்தை வீதம், குழந்தைகளுக்கு அலங்காரம் செய்து, பூஜித்து வழிபடுவது முறையாகும்.

அதன்படி,
முதல் நாளில் 2 வயதுக் குழந்தை - குமாரி
இரண்டாம் நாள் 3 வயதுக் குழந்தை - திரிமூர்த்தி
மூன்றாம் நாள் - 4 வயதுக் குழந்தை - கல்யாணி
நான்காம் நாள் - 5வயதுக் குழந்தை - ரோகிணி
ஐந்தாம் நாள் - 6 வயதுக் குழந்தை - காளிகா
ஆறாம் நாள் - 7 வயதுக் குழந்தை - சண்டிகா
ஏழாம் நாள் - 8 வயதுக் குழந்தை - சாம்பவி
எட்டாம் நாள் - 9 வயதுக் குழந்தை - துர்க்கா
ஒன்பதாம் நாள் - 10 வயதுக் குழந்தை - சுபத்ரா
என்று வணங்கப்படுவார்கள்.

புரட்டாசி மாத வளர்பிறைப் பிரதமையில் தொடங்கி விஜயதசமியில் நவராத்திரி முடிகிறது. முதல் ஒன்பது நாட்களில் முப்பெரும் தேவியரை வழிபடவேண்டும்.

முதல் (1,2,3) மூன்று நாட்கள் துர்க்கையின் வழிபாடு.
இடை மூன்று (4,5,6) நாட்கள் லட்சுமி வழிபாடு.
கடை மூன்று நாட்கள் (7,8,9) சரஸ்வதி வழிபாடு.

துர்கை : இவள் நெருப்பின் அழகு. ஆவேசப் பார்வை. வீரத்தின் தெய்வம். சிவபிரியை. இச்சா சக்தி. ''கொற்றவை'', ''காளி'' என்றும் குறிப்பிடுவர். வீரர்களின் தொடக்கத்திலும், முடிவிலும் வழிப்படும் தெய்வம். துர்க்கை, மகிஷன் என்ற அசுரனுடன் ஒன்பது இரவுகள் போரிட்டாள். இவையே ' நவராத்திரி ' எனப்படும்.
அவனை வதைத்த பத்தாம் நாள் 'விஜயதசமி' [ விஜயம் மேலான வெற்றி].

நவதுர்க்கை: வன துர்கை, சூலினி துர்கை, ஜாதவேதோ துர்கை, ஜ்வாலா துர்கை, சாந்தி துர்கை, சபரி துர்கை, தீப துர்கை, சூரி துர்கை, லவண துர்க்கை. இவர்கள் துர்க்கையின் அம்சங்கள்.

இலட்சுமி : இவள் மலரின் அழகு. அருள் பார்வையுடன் அழகாக விளங்குகிறாள். செல்வத்தின் தெய்வம். விஷ்ணு பிரியை. கிரியா சக்தி. இலட்சுமி அமுதத்துடன் தோன்றியவள். அமுத மயமானவள். பொன்னிற மேனியுடன் கமலாசனத்தில் வீற்றிருக்கிறாள். இவளை நான்கு யானைகள் எப்போதும் நீராட்டுகிறது. முக்கியமாக, இவள் செல்வ வளம் தந்து வறுமையை அகற்றி அருள் புரிபவள்.

அஷ்ட இலட்சுமி : ஆதி லட்சுமி, மகா இலட்சுமி, தன இலட்சுமி, தானிய இலட்சுமி, சந்தான இலட்சுமி, வீர இலட்சுமி, விஜய இலட்சுமி, கஜ இலட்சுமி . இவர்கள் இலட்சுமியின் அம்சங்கள்.

சரஸ்வதி : இவள் வைரத்தின் அழகு. அமைதிப் பார்வையுடன் அழகாகப் பிரகாசிக்கிறாள். கல்வியின் தெய்வம். பிரம்மபிரியை. ஞான சக்தி. தமிழ் நூல்கள் சரஸ்வதியை, "ஆற்றங்கரைச் சொற்கிழத்தி" என்று குறிப்பிடுகிறது.

சரஸ்வதி பூஜை :
நவராத்திரியின் ஆறாவது, ஏழாவது நாளில் மூல நட்சத்திரம் உச்சமாக இருக்கும்போது, சரஸ்வதியை ஆவாகனம் செய்வது முறையாகும். இது தேவியின் அவதார நாள். சரஸ்வதி பூஜை சிரவணம் என்ற நட்சத்திரம் உச்சமாகும் நாளில் நிறைவு பெறுகிறது. சிரவணம் - திருவோணம் அன்றே விஜயதசமி.

சமுதாயத்தில் தொழில், புலமை என்ற இரண்டே பிரிவுகளில் அடங்குகிறது. ஒன்று புலமை ஞானம், இரண்டு தொழில் ஞானம். புலமை பெறுவதும் ஒரு தொழில்தான். இது ஞானத்துடன் தொடர்புடையது. எனவே, ஞானத்தின் தெய்வமான சரஸ்வதியைப் பூTப்பது சரஸ்வதி பூஜை. நவராத்திரியின் எட்டாம் நாளை மகா அஷ்டமி என்றும், ஒன்பதாம் நாளை மகா நவமி என்றும் குறிப்பிடுவது வழக்கம். இவை மேலான நாட்களாகும்.

விஜய தசமி:
ஒன்பது நாட்கள் மகிஷாசுரனுடன் போரிட்ட தேவி, பத்தாம் நாள் அவனை வென்றாள். இந்நாளே விஜயதசமி - வெற்றி தருகிற நாள். பல குழந்தைகள் கல்வியினை இன்றுதான் ஆரம்பிப்பார்கள். இன்று தொடங்கும் அனைத்து நற்காரியங்களும் வெற்றி தரும்.

அஷ்ட சரஸ்வதி: வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கடசரஸ்வதி, நீலசரஸ்வதி, கினி சரஸ்வதி

ஒன்பது சக்திகள்: முப்பெரும் சக்திகளில், ஒவ்வொரு சக்திக்கும் மும்மூன்று அம்சங்கள் சிறப்பாக உள்ளன.

துர்க்கை: 1. மகேசுவரி, 2. கெளமாரி , 3. வராகி.

இலட்சுமி: 4. மகாலெட்சுமி 5. வைஷ்ணவி 6. இந்திராணி.

சரஸ்வதி : 7. சரஸ்வதி 8. நாரசிம்மி , 9. சாமுண்டி.

நவராத்திரியின் போது இந்த ஒன்பது தேவியர்களையும் முறையாக வழிபடுகிறோம்.

ஒரு தேவியை முதன்மையாகவும், மற்றவர்களைப் பரிவார தெய்வங்களாகவும் கொள்ளவேண்டும். நவராத்திரியில் கன்னி வழிபாடு என்பது ஒரு வகை.

நவராத்திரியின் போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கன்னியை ஒவ்வொரு தேவியாக பாவனை செய்து வழிபடுவது ஒரு முறை. இதனால், நவராத்திரி வழிபாட்டில் பல கன்னியர்களும், அவர்களின் குடும்பத்தாரும் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இவ்வாறு வழிபாட்டில் பலர் பங்கேற்பது என்பது நவராத்திரியின் விழாவின் குறிக்கோள்களில் ஒன்றாகும்.

புராணங்களில் நவராத்திரி :
வால்மீகி இராமாயணத்தில் புரட்டாசியில் வரும் தசமி (விஜய தசமி) அன்று இராமன், இராவணனுடன் போர் செய்ய உகந்த நாள் என்று அன்று போருக்கு புறப்பட்டதாக இருக்கிறது.
பாண்டவர்கள் அஞ்ஞானவாசம் முடிந்து அர்ச்சுனன்தான் ஒரு ஆண்டு காலமாக கட்டி வைத்திருந்த ஆயுதங்களை எல்லாம் விஜய தசமி அன்று மீண்டும் எடுத்து உயிர்ப்பித்துகொண்டான்.

நவராத்திரி புராணம் :
முன்பு வரமுனி என்ற பெரும் சக்தி வாய்ந்த முனிவர் ஒருவர் இருந்தார். எல்லாவற்றிலும் சிறந்து விளங்கியவர் வரமுனி. இவருக்கு நிகர் இவர்தான். தனக்கு இணை யாரும் இல்லை என்ற தலைக்கனம் இவருக்கு ஏற்பட்டது. பதவியும், தலைக்கனமும் ஏற்பட்டால் மற்றவர்களை துச்சமாக மதிக்கும் எண்ணமும் வரும்தானே?

வரமுனிக்கும் அது வந்தது. இவர் தலைக்கனம் காரணமாக அகத்தியர் போன்ற பெரும் முனிவர்களிடமும் மகிஷம் (எருமை) போல் உருவம் கொண்டு அவமரியாதையாக நடந்து கொண்டார். இதனால் கோபம் கொண்ட முனிவர்கள் அனைவரும், வரமுனியை எருமையாக போவாய் என்று அவருக்கு சாபமிட்டனர்.

ரம்பன் என்ற அசுரன் கடுமையான தவத்தில் ஈடுபட்டிருந்தான். அவன் தவத்தை மெச்சி அவன் முன் தோன்றினார் அக்னி பகவான். அவன் தனக்கு சர்வ வல்லமை பொருந்திய மகன் வேண்டும் என வேண்டினான்.

அவன் வேண்டியதை அருளிய அக்னி தேவன், ரம்பன்!, நீ கேட்ட வரத்தை அளித்தேன். நீ எந்த பெண்ணை கொண்டு ஆசை கொள்கிறாயோ அவள் மூலம் உனக்கு மகன் பிறப்பான் என்று கூறி மறைந்தார்.

மனம் முழுக்க உற்சாகத்துடன் வந்த ரம்பன் முதலில் கண்டது காட்டெருமையை. அவனது அசுர புத்தி வேலை செய்தது. காட்டெருமை மேல் காதல் கொண்டான். தானும் காட்டெருமையாக உருமாறினான். முனிவர்களால் எருமையாய் பிறப்பாய் என்று சாபம் பெற்ற வரமுனி, அசுரனின் வாரிசாக மகிஷாசுரனாக பிறந்தான்.

மகிஷாசுரன் 10 ஆயிரம் ஆண்டுகள் பிரம்மனை குறித்து தவம் இருந்தான்.

எனக்கு தேவர்கள், அசுரர்கள், மானிடர்களால் மரணம் ஏற்படக்கூடாது. கன்னிப் பெண்ணால்தான் மரணம் ஏற்பட வேண்டும் என்று வரம் கேட்டான். அவன் கேட்ட வரத்தை அருளினார் பிரம்ம தேவன்.

மகிஷாசுரனின் அராஜகம் அதிகமாகியது. மகாவிஷ்ணுவை தஞ்சமடைந்தனர் தேவர்கள். மகிஷாசுரனுக்கு மரணம் பெண்ணால்தான். அவனை சம்ஹாரம் செய்ய தகுந்தவள் மகாசத்தி மட்டும்தான் என்று கூறினார் மகாவிஷ்ணு.

மும்மூர்த்திகளும் தேவர்களும் ஒன்று கூடி பிரார்த்தனை செய்ததும் ஸத்வ, ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணங்களையும் ஒன்றாக பெற்ற மகாலட்சுமியாய் தோன்றினாள் அம்பாள்.

தங்களை காக்க வந்த தேவிக்கு தேவர்கள் படைக்கலங்களைப் படைத்தனர். சிவ பெருமான் சூலம் தந்தார். அக்னி சக்தி தந்தார். வாயு பகவான் வில்லும், அம்புறாத்துணியும் கொடுத்தார். தேவி மகிஷனை சம்ஹாரம் புரிய சர்வலங்கார பூSதையாய் புறப்பட்டாள்.
அம்பாளுடன் கடும் போர் புரிந்தான் மகிஷாசுரன். கடும் போர் முடிவுக்கு வந்தது. அநீதி அழிக்கப்பட்டது. அழிந்தான் மகிஷாசுரன்.

அம்பாள் மகிஷாசுரனை சம்ஹாரம் செய்தது அஷ்டமி தினத்தன்று. தேவர்கள் அம்மனை வணங்கி வழிபட்டது அடுத்த நாளான நவமி தினத்தன்று. தேவி மணித்வீபம் (மூலஸ்தானம்) சென்றது அதற்கு அடுத்த நாளான தசமி தினத்தன்று.

இந்த நாட்கள்தான் நவராத்திரியின் கடைசி 3 நாட்களாகக் கொண்டாடப்படுகிறது.

மற்றொரு கதை:
மகிஷாசுரனை சம்ஹாரம் செய்ய அம்மன் 9 நாள் கொலுவிருந்து 10ம் நாள் மகிஷாசுரனை சமிஹாரம் செய்து மகிஷாசுரமர்த்தனியானாள் என்றும் கூறப்படுகிறது. 9 நாட்கள் அம்மன் ஊசி மேல் தவம் நின்று தவம் புரிந்தாள். இதனால் நவராத்திரி தினமான 9 நாட்களும் ஊசியால் துணிகளை தைப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

விஜயதசமியையொட்டி வீடுகள் மாவிலை தோரணங்கள் கட்டி அலங்கரிக்கப்படும்.

சரஸ்வதி பூஜை தினத்தோடு நவராத்திரி விழா நிறைவடைந்து விடுவதான காரணத்தால் விஜயதசமி தினத்தன்று அம்மனுக்கு சுண்டல் நிவேதனம் கிடையாது.

காலையிலேயே வடை, பாயாசம், பலகாரங்களுடன் அம்மனுக்கு நிவேதனம் செய்யப்படும்.

இரவு கொலுவில் வைக்கப்பட்டிருந்த பொம்மைகள் படுக்கவைக்கப்பட்டு மறுநாள் கொலு பொம்மைகள் எடுத்து வைக்கப்படும்.

நவராத்திரி சமயத்தில் சுமங்கலிகளை வீட்டிற்கு அழைக்க வேண்டும், அவர்களை அன்போடு அழைத்து, வஸ்திரம் (புடவை அல்லது சட்டை பிட்), குங்குமம், சீப்பு, சிமிழ், கண்ணாடி, மஞ்சள் கிழங்கு, வெற்றிலை பாக்கு, தக்ஷணை ஆகியவற்றோடு வடை, பாயஸம் அளித்து, மகிழ்வித்தால் மிகப் பெரும் பாக்கியம் கிட்டும்.

நவராத்திரி சமயத்தில் ஸ்ரீ சண்டி யாகம் செய்வது மிகப் பெரும் பேறு அளிக்கக் கூடியது. மார்க்கண்டேய புராணம் என்னும் புராணத்தின் மையப்பகுதியாக அமைந்திருக்கக் கூடிய துர்கா சப்த சதீ என்னும் 700 ஸ்லோகங்கள் முழுக்க முழுக்க அம்பிகையின் லீலைகளைச் சொல்லக் கூடியவை. அம்பிகைக்குரிய காலமாகிய நவராத்திரியில் அம்பிகைக்குகந்த ஸ்ரீ சண்டி ஹோமம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் :
1. ஏழ்மை வராது
2. அன்பு கிடைக்கும்
3. எதிரிகள், இயற்கையால் ஆபத்து உண்டாகாது
4. ஸுவாஸினி, பசு, ரிஷி, குரு, தேவதைகளால் உண்டான சாபம் நீங்கும்
5. விவசாயத்தில் நற்பலன் கிட்டும்
6. கல்வி ஞானம் பெருகும்
7. உத்யோக உயர்வு
8. திருமணமாகாதவர்களும் நல்ல இல்லறம் அமையும்.
9. மன அமைதி கிடைக்கும்.
10. தேக ஆரோக்கியம்

நவராத்திரியில் கொலு வைக்கும் முறை.
ஒன்பது படிகள் :
* முதல் படியில் ஓரறிவு உயிர்ப் பொருட்களை உணர்த்தும் புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள் இருத்தல் வேண்டும்.
* இரண்டாவது படியில் இரண்டறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள் இருத்தல் வேண்டும்.
* மூன்றாவது படியில் மூன்றறிவு உயிர்களை விளக்கும் கரையான், எறும்பு போன்ற பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* நான்காவது படியில் நான்கு அறிவு கொண்ட உயிர்களை விளக்கும் நண்டு, வண்டு பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* ஐந்தாவது படியில் ஐந்தறிவு கொண்ட நான்கு கால் விலங்குகள், பறவைகள், பொம்மைகள் இடமி பெற வேண்டும்.
* ஆறாவது படியில் ஆறு அறிவு படைத்த உயர்ந்த மனிதர்களின் பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* ஏழாவது படியில் மனிதனுக்கு மேற்பட்ட மகரிஷிகளின் பொம்மைகள் இடம் பெற வேண்டுமி.
* எட்டாவது படியில் தேவர்களின் உருவங்கள் இடம்பெற வேண்டும். நவக்கிரக அதிபதிகள், பஞ்சபூத தெய்வங்கள், அஷ்டதிக்கு பாலகர்கள் என்பன வைக்கலாம்.
* ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகள் அவர்தம் தேவியர்களான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோருடன் இருக்க வேண்டும். ஆதிபராசக்தி நடு நாயகமாக இருக்க வேண்டும்.

நவராத்திரியைக் கொண்டாடுவோம் ! நல்லன யாவும் பெறுவோம்

அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி -கவிஞர் கண்ணதாசனின் விளக்கவுரையுடன்

அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி -
கவிஞர் கண்ணதாசனின் விளக்கவுரையுடன்
ஆனந்தமாய், என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்,
வான் அந்தமான வடிவு உடையாள், மறை நான்கினுக்கும்
தான் அந்தமான, சரணாரவிந்தம்-தவள நிறக்
கானம் தம் ஆடரங்கு ஆம் எம்பிரான் முடிக் கண்ணியதே. - 11
பொருள்: அபிராமித்தாய் என் ஆனந்தமாகவும், என் அறிவாகவும் விளங்குகின்றாள். என் வாழ்வில் அமுதமாக நிறைந்திருக்கின்றாள். அவள் ஆகாயத்தில் தொடங்கி மண், நீர், நெருப்பு, காற்று என்ற ஐம்பெரும் வடிவுடையவள். வேதம் நான்கினுக்கும் தானே தொடக்கமாகவும், முடிவாகவும் இருப்பவள். இப்படிப்பட்ட தாயின் திருவடித் தாமரைகள், திருவெண் காட்டில் திருநடனம் புரியும் எம்பிரான் ஈசன் முடிமேல் தலைமாலையாகத் திகழ்வன.
கண்ணியது உன் புகழ், கற்பது உன் நாமம், கசிந்து பக்தி
பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில், பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து-நான் முன்செய்த
புண்ணியம் ஏது? என் அம்மே. புவி ஏழையும் பூத்தவளே. - 12
பொருள்: என் அம்மையே! அபிராமித்தாயே! ஏழ் உலகையும் பெற்றவளே! நான் எப்பொழுதும் ஊனுருக நினைவது உன்புகழே! நான் கற்பதோ உன் நாமம். என் மனம் கசிந்து பக்தி செய்வதோ உன் திருவடித் தாமரை. நான் இரவென்றும், பகலென்றும் பாராமல் சென்று சேர்ந்திருப்பது உன் அடியார் கூட்டம். இவைகளுக்கெல்லாம் தாயே! நான் செய்த புண்ணியம்தான் என்ன!
பூத்தவளே, புவனம் பதினான்கையும். பூத்தவண்ணம்
காத்தவளே. பின் கரந்தவளே. கறைக்கண்டனுக்கு
மூத்தவளே. என்றும்மூவா முகுந்தற்கு இளையவளே.
மாத்தவளே. உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே? -13
பொருள்: உலகம் பதினான்கையும் பெற்றவளே! எப்படிப் பெற்றாயோ, அப்படியே உலகத்தைக் காப்பவளே! பின்பு ஏதோ ஒரு காரணம் கருதி, உலகத்தை உன்னில் அடக்கிக் கொண்டவளே! கறைக் கண்டனுக்கு (ஆலகால விஷத்தை உண்டதால் கறை எனப்பட்டது) மூத்தவளே! (ஆதி சக்தியிலிருந்தே சிவன், பிரம்மா, விஷ்ணு முதலானோர் தோன்றினார்கள் என்பது வரலாறு) என்றும் சீர் இளமை பொருந்திய திருமாலுக்குத் தங்கையே! அருந்தவத்தின் தலைவியே! அபிராமி அன்னையே! உன்னையன்றி மற்றொரு தெய்வத்தை வணங்கேன்.
வந்திப்பவர் உன்னை, வானவர் தானவர் ஆனவர்கள்,
சிந்திப்பவர், நல்திசைமுகர் நாரணர், சிந்தையுள்ளே
பந்திப்பவர், அழியாப் பரமானந்தர், பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி. நின் தண்ணளியே: - 14
பொருள்: ஏ அபிராமி அன்னையே! உன்னை வணங்குபவர்கள் தேவர்கள், அசுரர்கள், மற்றும் உன்னை விரும்பிப் பல காலமும் தொழும் அடியார்கள்! நான்கு முகங்களையுடைய பிரம்மனும் விஷ்ணுவுமே உன்னைச் சிந்திப்பவர்கள்! நின்னை மனத்திற்கு கட்டுப்படுத்தியவர் என்றும் அழியாத பரமானந்த நாதனாகிய சிவபெருமானே! இவர்களைக் காட்டிலும் உலகத்தில் நின்னைத் தரிசனம் செய்வார்க்கே நீ எளிதில் அருள் புரிகின்றாய். என் தாயே! உன் கருணைதான் என்னே! வியத்தற்குரிய தன்மையது!
தண்ணளிக்கு என்று, முன்னே பல கோடி தவங்கள் செய்வார்,
மண் அளிக்கும் செல்வமோ பெறுவார்? மதி வானவர் தம்
விண் அளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடும், அன்றோ?-
பண் அளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே. - 15
பொருள்: அன்னையே! அபிராமித் தாயே! இசையை எழுப்பக்கூடிய அழகிய இன்சொல் கூறும் எம் பசுங்கிளியே! நின் திருவருள் நாடிப் பலகோடி தவங்களைச் செய்தவர்கள் இவ்வுலகத்தில் கிடைக்கக் கூடிய செல்வங்களை மட்டுமா பெறுவர்? சிறந்த தேவேந்திரன் ஆட்சி செய்யக்கூடிய விண்ணுலக போகத்தையும் பெறுவர். மற்றும், அழியாத முக்திப் பேற்றையும் அடைவார்கள் அல்லவா!
கிளியே, கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும்
ஒளியே, ஒளிரும் ஒளிக்கு இடமே, எண்ணில் ஒன்றும் இல்லா
வெளியே, வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே.-
அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே. - 16
பொருள்: கிளி போன்றவளே! தாயே! உன்னை நினைந்து வழிபடும் அடியார் மனத்தினிலே சுடர் விட்டுப் பிரகாசிக்கும் ஒளியே! அவ்வாறு ஒளிரும் ஒளிக்கு நிலையாக இருப்பவளே! ஒன்றுமே இல்லாத அண்டமாகவும், அவ்வண்டத்தினின்று ஐம்பெரும் பூதங்களாகவும் விரிந்து நின்ற தாயே! எளியேனாகிய என் சிற்றறிவுக்கு நீ எட்டுமாறு நின்றதும் அதிசயமாகும்!
அதிசயம் ஆன வடிவு உடையாள், அரவிந்தம் எல்லாம்
துதி சய ஆனன சுந்தரவல்லி, துணை இரதி
பதி சயமானது அபசயம் ஆக, முன் பார்த்தவர்தம்
மதி சயம் ஆக அன்றோ, வாம பாகத்தை வவ்வியதே? - 17
பொருள்: அபிராமி அன்னை அதிசயமான அழகுடையவள்! அவள் தாமரை போன்ற மலர்களெல்லாம் துதிக்கக் கூடிய வெற்றி பொருந்திய அழகிய முகத்தையுடையவள்; கொடி போன்றவள்; அவள் கணவன் முன்பு ஒருநாள் மன்மதனின் வெற்றிகளையெல்லாம் தோல்வியாக நெற்றிக் கண்ணைத் திறந்து பார்த்தார். அப்படிப்பட்டவரின் மனத்தையும் குழையச் செய்து, அவருடைய இடப் பாகத்தைக் கவர்ந்து கொண்டாள், வெற்றியுடைய தேவி.
வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும், உங்கள் திருமணக் கோலமும், சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்து என்னை ஆண்டபொற் பாதமும் ஆகிவந்து-
வெவ்விய காலன் என்மேல் வரும்போது-வெளி நிற்கவே. - 18
பொருள்: அபிராமித் தாயே! என் அகப்பற்று, புறப்பற்று ஆகிய பாசங்களை அகற்றி, என்னை ஆட்கொண்டு அருளிய நின் பொற்பாதங்களோடு, எந்தை எம்பிரானோடு இரண்டறக் கலந்திருக்கும் அர்த்த நாரீஸ்வரர் அழகும், தனித்தனி நின்று காட்சி தரும் திருமணக்கோலமும், கொடிய காலன் என்மேல் எதிர்த்து வரும் காலங்களில் காட்சியருள வேண்டும்.
வெளிநின்ற நின்திருமேனியைப் பார்த்து, என் விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரைகண்டது, இல்லை, கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது, என்ன திருவுளமோ?-
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே. - 19
பொருள்: ஒளி பொருந்திய ஒன்பது கோணங்களில் (நவசக்தி) உறைகின்ற தாயே! நின் திருமணக் காட்சி தருவதைக் கண்ட என் கண்களும், நெஞ்சும் கொண்ட மகிழ்ச்சி வெள்ளத்திற்கு இதுவரை ஒரு கரை கண்டதில்லை. ஆயினும் தெளிந்த ஞானம் இருப்பதை உணர்கிறேன். இது உன்னுடைய திருவருள் பயனேயாகும்.
உறைகின்ற நின் திருக்கோயில்-நின் கேள்வர் ஒரு பக்கமோ,
அறைகின்ற நான் மறையின் அடியோ முடியோ, அமுதம்
நிறைகின்ற வெண் திங்களோ, கஞ்சமோ, எந்தன் நெஞ்சகமோ,
மறைகின்ற வாரிதியோ?- பூரணாசல மங்கலையே. - 20
பொருள்: என்றும் பூரணமாய் விளங்குகின்ற அபிராமி அன்னையே! நீ வீற்றிருக்கும் திருக்கோயில் நின் கொழுநராகிய சிவபெருமானின் ஒரு பாகமோ? அன்றி, ஓதப்படுகின்ற நான்கு வேதங்களின் ஆதியோ? அந்தமோ? அன்றியும், அமிர்தம் போன்ற குளிர்ந்த முழுச்சந்திரனேயன்றி வெண் தாமரையோ? இல்லை, என்னுடைய நெஞ்சம்தானேயோ அல்லது செல்வமெல்லாம் மறைந்திருகக் கூடிய பாற் கடலோ? தாயே! நீ எங்கும் நிறைந்திருப்பதால் எதில் என்று தோன்றவில்லையே

அஷ்ட லட்சுமி துதிகள்

அஷ்ட லட்சுமி துதிகள்இந்த மந்திரம் கூறி வழிபட்டாலே போதும் எல்லா நன்மைகளும் வந்து சேரும்.
1 தன லட்சுமி
யா தேவி ஸர்வ பூதேஷூ புஷ்டி ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் செல்வத்தின் வடிவாக உறைகிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன்,வணங்குகிறேன்,வணங்குகிறேன்.
2 வித்யா லட்சுமி
யா தேவி ஸர்வ பூதேஷூ புத்தி ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம
எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் கலை, கல்வியின் வடிவாக உறைகிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன், வணங்குகிறேன், வணங்குகிறேன்.
3 தான்ய லட்சுமி
யா தேவி ஸர்வ பூதேஷூ க்ஷுதா ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம
எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் உணவு பொருட்களின் வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன், வணங்குகிறேன், வணங்குகிறேன்.
4 வீர லட்சுமி
யா தேவி ஸர்வ பூதேஷூ த்ரூதிரு ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம
எந்த தேவியானவள் எல்லா உயிர்களிடத்தும் வீரம், வெற்றியின் அம்சமாக உறைகிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.
5 ஸௌபாக்ய லட்சுமி
யா தேவி ஸர்வ பூதேஷூ முஷ்டி ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம
எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் சுகம், நிம்மதியின் வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.
6 சந்தான லட்சுமி
யா தேவி ஸர்வ பூதேஷூ மாத்ரூ ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம
எந்த தேவியானவள் எல்லா உயிர்களிடத்தும் தாயாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.
7 காருண்ய லட்சுமி
யா தேவி ஸர்வ பூதேஷூ தயா ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம
எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் அன்பு, கருணை வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.
8 ஆதி லட்சுமி
யா தேவி ஸர்வ பூதேஷூ லக்ஷ்மீரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம
எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் அனைத்து செல்வங்களின் வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

ஸ்ரீ ஸரஸ்வதி சதநாம அஷ்டோத்ரம்.

ஸ்ரீ ஸரஸ்வதி சதநாம அஷ்டோத்ரம்.

ஸரஸ்வதீ மஹாபத்ரா மஹாமாயா வரப்ரதா
ஸ்ரீப்ரதா பத்மநிலயா பத்மாக்ஷி பத்மவக்த்ரகா
ஸிவாநுஜா புஸ்தகப்ருத் ஜ்ஞாநமுத்ரா ரமாபரா
காமரூபா மஹாவித்யா மஹாபாதக நாஸிநீ.
மஹாஸ்ரயா மாலிநீ ச மஹாபோகா மஹாபுஜா
மஹாபாகா மஹோத்ஸாஹா திவ்யாங்கா ஸுரவந்திதா
மஹாகாளீ மஹாபாஸா மஹாகாரா மஹாங்குஸா
பீதாச விமலா விஸ்வா வித்யுந்மாலா ச வைஷ்ணவி.
சந்த்ரிகா சந்த்ரவதநா சந்த்ரலேகா விபூஷிதா
ஸாவித்ரீ ஸுரஸாதேவீ திவ்யாலங்கார பூஷிதா
வாக்தேவி வஸுதா தீவ்ரா மஹாபத்ரா மஹாபலா
போகதா பாரதீ பாமா கோவிந்தா கோமதீ ஸிவா.
ஜடிலா விந்த்யவாஸா ச விந்த்யாசல விராஜிதா
சண்டிகா வைஷ்ணவி ப்ராஹ்மீ ப்ரஹ்மஜ்ஞாநைக ஸாதநா
ஸௌதாமிநீ ஸுதா மூர்த்தி ஸுபத்ரா ஸுரபூஜிதா
ஸுவாசிநீ ஸுநாஸாச விநித்ரா பத்மலோசநா.
வித்யாரூபா விஸாலாக்ஷீ ப்ரஹ்மஜாயா மஹாபலா
த்ரயீமூர்த்திஸ் த்ரிகாலஜ்ஞா த்ரிகுணா ஸாஸ்த்ரரூபிணீ
ஸும்பாஸுர ப்ரமதிநீ ஸுபதாச ஸ்வராத்மிகா
ரக்தபீஜநிஹந்த்ரீச சாமுண்டா சாம்பிகா ததா.
முண்டகாய ப்ரஹரணா தூம்ரலோசந மர்தநா
ஸர்வதேவாஸ்துதா ஸௌம்யா ஸுராஸுர நமஸ்க்ருதா
காளராத்ரீ கலாதாரா ரூபஸௌபாக்ய தாயீநீ
வாக்தேவீ ச வராரோஹா வாராஹீ வாரிஜாஸநா.
சித்ராம்பரா சித்ரகந்தா சித்ரமால்ய விபூஷிதா
காந்தா காமப்ரதா வந்த்யா வித்யாதர ஸுபூஜிதா
ஸ்வேதாநநா நீலபுஜா சதுர்வர்க பலப்ரதா
சதுராநந ஸாம்ராஜ்யா ரக்தமத்யா நிரஞ்ஜநா.
ஹம்ஸாஸநா நீலஜங்க்கா ப்ரஹ்மவிஷ்ணு ஸிவாத்மிகா
ஏவம் ஸரஸ்வதீ தேவ்யா நாம்நாமஷ்டோத்தரம் சதம்.
இதி ஸ்ரீ ஸரஸ்வதி சதநாம அஷ்டோத்ரம் சம்பூர்ணம்.

ஸ்ரீ ஸரஸ்வதி சதநாம அஷ்டோத்ரம்.

ஸ்ரீ ஸரஸ்வதி சதநாம அஷ்டோத்ரம்.

புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடக்கூடாது. ஏன் தெரியுமா?d

புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடக்கூடாது.
ஏன் தெரியுமா?

புரட்டாசி மாதம் வெயிலும் காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும் மாதம்.
ஆனால் பூமி குளிர மழை பெய்யாது. இத்தனை மாதமாக வெயிலால் சூடாகியிருந்த பூமி மழைநீரை ஈர்த்து வெப்பத்தை குறைக்க ஆரம்பிக்கும்.
சூட்டை கிளப்பிவிடும் காலம் என்பார்கள்.
இது வெயில் கால வெப்பத்தை காட்டிலும் கெடுதல் தரக்கூடியது.
இந்த நேரத்தில் அசைவம் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகப்படுத்தி உடல் நலத்தை குறைக்கும்.
வயிறு சம்பந்தமான பிரச்சனையை ஏற்படுத்தும்.
அதனால் தான் புரட்டாசி மாதம் அசைவத்தை ஒதுக்கினர் நம் முன்னோர்.
அது மட்டுமன்றி சரிவர பெய்யாத மழை திடீர் வெப்ப மாறுதல் நோய்கிருமிகளை உருவாக்கிவிடும்.
காய்ச்சல் சளி தொந்தரவு அதிகரிக்கும்.
துளசி இதை கட்டுப்படுத்தும். இதற்காகவே புரட்டாசியில் விரதம் இருந்து (அசைவம் ஒதுக்கி) பெருமாள் கோவிலுக்கு போகும் வழக்கத்தை ஏற்படுத்தினர்.

அம்பாள் சொன்ன திருத்தலங்கள்!

அம்பாள் சொன்ன திருத்தலங்கள்!
அம்பாள் சொன்ன திருத்தலங்கள்! அம்பாளின் திருநாமங்கள் மட்டுமல்ல, அவளின் அருள் சுரக்கும் சில தலங்களின் பெயர்களும் மகிமைபெற்றனவாகத் திகழ்கின்றன. இதுகுறித்து சாட்சாத் பார்வதிதேவியே பர்வதராஜனிடம் விவரித்திருக்கிறாள். அம்பிகை சொன்ன அந்த இருப்பிடங்களில் சிலவற்றின் இன்றைய பெயர்கள் தெரியாவிட்டாலும்கூட, அந்த நாமங்களை அப்படியே படிப்பது நமக்கு நன்மை தரும். நவராத்திரி காலத்தில் அவற்றை உச்சரித்து அம்பாளை தியானிப்பதால் கூடுதல் பலன் உண்டு. சரி, அந்த இடங்கள் என்னென்ன தெரிந்துகொள்வோமா? லட்சுமிதேவிக்கு வாசஸ்தானமாகவும் மகாஸ்தானமாகவும் இருக்கும் கோலாபுரம். ரேணுகாதேவியின் இருப்பிடமான மாத்ருபுரம். துர்கா தேவியின் உத்தமமான இருப்பிடங்களான துளஜாபுரம், சப்தஸ்ருங்கம், இங்குலை, ஜ்வாலாமுகி, சாகம்பரி, பிரமரி, ஸ்ரீரக்த தந்திரிகா. அன்னபூரணியின் இருப்பிடமாகவும் தனக்குமேல் உயர்ந்த ஒன்று இல்லாததுமான காஞ்சிபுரம். பராசக்தியே மணலால் சிவலிங்கம் பிடித்து பூஜை செய்த ஏகாம்பரம். யோகேஸ்வரியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட தேஜோஸ்தாபம், விந்தியாசலம். பீமாதேவி. விமலா தேவி. நீலாம்பிகை. திருவானைக்காவல். ஸ்ரீநகரம். நேபாளத்தில் குஹ்யகாளி. தகராகாசமாகிய சிதம்பரம். வேதாரண்யம். சீனத்தில் நீல. . .

ஸ்ரீராமனும் நவராத்திரியும்!

தெய்வ அவதாரங்களும் புராணக் கதாபாத்திரங்களும் அம்பாளை வழிபட்டு நல்லருள் பெற்ற திருக்கதைகளை புராணங்கள் விளக்குகின்றன. கிருஷ்ண பகவான் துர்கையின் ஓர் அம்சமான ஸ்ரீகாத்யாயினி தேவியை குறித்து விரதம் இருந்த தகவலையும், அரிச்சந்திரன் ஸதாட்சி எனும் அம்பிகையைக் குறித்து விரதம் இருந்து அருள்பெற்ற கதையையும் அந்த ஞான நூல்கள் விவரிக்கின்றன.
ராவணனை வதம் செய்யும் முன் ஸ்ரீராமன் நவராத்திரி விரதம் அனுஷ்டித்தார் என்றும், அவருக்கு இந்த விரதத்தை அனுஷ்டிக்கும் முறையை நாரதர் விளக்கினார் என்றும் வியாசர் தேவிபாகவத புராணத்தில் பதிவு செய்துள்ளார்.
சீதாதேவியை ராவணன் அபகரித்துக்கொண்டு போனதும், ராமர் துயரத்தில் ஆழ்ந்தார். அப்போது அவரை நாடி, மகதி என்னும் வீணையை மீட்டியபடி நாரதர் வந்து சேர்ந்தார்.
அவரை வரவேற்று வணங்கிய ஸ்ரீராமனும் லட்சுமணனும் அவர் அருகே அமர்ந்தனர். ஸ்ரீராமனின் முகவாட்டத்தைக் கண்ட நாரதர்  பேசத் தொடங்கினார்...
''ராகவா! சாதாரண மானிடனைப் போல் நீ ஏன் துயரப்படுகிறாய்? நடந்தது எல்லாம் எனக்குத் தெரியும். சில காரியங்களுக்காக நான் சொர்க்கலோகம் போனபோது, அங்கு நடந்த சில விவரங்களைத் தெரிந்துகொண்டுதான் உன்னிடம் வந்தேன். அதை அப்படியே உன்னிடம் சொல்கிறேன் கேள். தனக்கு மரணம் வரும் என்பது தெரியாமல், ராவணன் சீதையை அபகரித்துவிட்டான். ராவணனை சம்ஹாரம் செய்வதற்காகவே நீ அவதரித்து இருக்கிறாய். ராவணன் சீதையிடம் கொண்ட மோகம், பூர்வ ஜென்மத்தால் ஏற்பட்டது.
போன பிறவியில் சீதை, தவத்தில் சிறந்த முனிவர் ஒருவரின் மகளாக அவதரித்து வளர்ந்து வந்தாள். தவம் செய்த அவளைக் கண்டு மோகம் கொண்ட ராவணன் பலாத்காரமாக அவள் கையைப் பிடித்து இழுத்தான். தனக்கு மனைவியாகும்படி வற்புறுத்தினான். கோபம் தாங்காத அவள், 'தீயவனே! உன்னைக் கொல்வதற்காக நானே அயோநிஜையாக (கர்ப்பவாசம் இல்லாமல்) அவதரிப்பேன். உன்னால் தொடப்பட்ட இந்த உடம்பை இனியும் வைத்திருக்கமாட்டேன்’ என்று சொல்லித் தீயில் விழுந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டாள்.
அப்படிப்பட்ட கற்புக்கரசியை விவரம் தெரியாமல், பாம்பை எடுத்துக் கழுத்தில் போட்டுக் கொள்வதுபோல, தன் குலமெல்லாம் நாசமடைவதற்காகவே ராவணன் அபரித்துக் கொண்டு போயிருக்கிறான். நீயும் தேவர்களின் பிரார்த்தனைக்காக அஜமகாராஜன் பரம்பரையில் ராவணன் வதத்துக்காகவே அவதரித்து இருக்கிறாய்.
ஆகவே, ராமா! சீதையைப் பற்றிக் கவலைப்படாதே. சீதை அசோகவனத்தில் உன்னையே தியானித்துக் கொண்டிருக்கிறாள். அவளுடைய உணவுக்காக தேவேந்திரன் காமதேனுவின் பாலை ஒரு பாத்திரத்தில் இட்டு, சீதையிடம் அனுப்பி இருக்கிறான். அதை உண்டு சீதை பசி, தாகம் இல்லாமல் இருக்கிறாள். நானும் பார்த்தேன். நீ தைரியமாக இரு!' என்று ஆறுதலும் தைரியமும் உரைத்த நாரதர், நவராத்திரி விரத மகிமையையும் அவருக்கு விவரித்தார்.
''ரகு குல உத்தமா! ராவணனை சம்ஹரிப்பதற்கான வழியைச் சொல்கிறேன். நவராத்திரியில் விரதம் இருந்து அம்பிகையை பூஜை செய்தால், அது எல்லாவிதமான ஸித்திகளையும் கொடுக்கும். இந்திரன், விஸ்வாமித்திரர், பிருகு, வசிஷ்டர், காசியபர், ப்ருகஸ்பதி முதலானவர்கள் எல்லாம் நவராத்திரி விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டு, அவரவர் வேண்டியதைப் பெற்றார்கள்.
ராமா! சுகத்தை விரும்புபவன் மங்கலகரமான இந்த விரதத்தை அனுஷ்டிப்பான். ராவணனை வதம் செய்தவற்கு உண்டான ஊக்கத்தோடு முயற்சி உள்ளவனாக விதிப்படி இந்த விரதத்தைச் செய்!'' என்றார்.
ஸ்ரீராமன் அவரிடம், ''முனிவரே! தாங்கள் எல்லாம் அறிந்தவர். தாங்கள் வழிபடச் சொன்ன அம்பிகை யார்? அவள் மகிமை என்ன? அவள் எவ்வாறு வடிவம் கொள்கிறாள்? அவளுக்கான விரதம் எப்படிப்பட்டது!'' என்று கேட்டார்.
அவருக்குத் விரிவாக பதில் உரைத்தார் நாரதர்.
''அகில உலகங்களுக்கும் அன்னையான ஆதிசக்தியே அந்த அம்பிகை. அவள் எக்காலத்தும் இருக்கக்கூடியவள். சகல துக்கங்களையும் போக்கடிப்பவள். சகல விதமான விருப்பங்களையும் நிறைவேற்றி வைப்பவள். எல்லாராலும் பூஜிக்கத் தகுந்தவள்.
என் தந்தையான பிரம்ம தேவரிடம் சிருஷ்டி சக்தியாக இருக்கிறாள். மகாவிஷ்ணுவிடம் பரிபாலிக்கும் சக்தியாக இருக்கிறாள். ருத்ரனிடம் சம்ஹார சக்தியாக இருக்கிறாள். பிரம்மன் முதல் சிற்றெறும்பு வரை அனைத்திலும் இருக்கும் சக்திகள் எல்லாம் அந்த பராசக்தியிடம் இருந்து தோன்றிய சக்திகளே. பிரம்மன் முதலான பலரும், பலவிதமாக அவளைப் பற்றித் துதித்து இருக்கிறார்கள். அவற்றுக்கெல்லாம் அளவே கிடையாது!'' என்றார் நாரதர்.
ஸ்ரீராமன் தொடர்ந்து கேட்டார்... ''மகரிஷியே! தேவி விரதத்தின் விதிமுறைகளைப் பற்றி விரிவாகச் சொல்லுங்கள். அந்த விரதத்தைக் கடைப்பிடித்து அவள் அனுக்கிரகத்தைப் பெற வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறேன்.''
ஸ்ரீராமன் இப்படிக் கேட்டதும், ''ராமா! நானே முன்னால் இருந்து இந்த பூஜையை நடத்துகிறேன். தேவர்களுக்கு அனுகூல ஸித்தி உண்டாகும்படி உனக்கு உற்சாகத்தை விளைவித்து பூஜையை முடித்து வைக்கிறேன்'' என்றார் நாரதர்
மால்யவான் மலையில் பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நாரதர் முன்னிலையில் முறைப்படி பூஜை தொடங்கப்பட்டது. ஸ்ரீராமன் உபவாசத்தோடு இருந்து பிரதமை முதல் பூஜையை நடத்தி வந்தார். அஷ்டமி தினம். நள்ளிரவு நேரம். அந்த மலையின் உச்சியில், அம்பிகை சிங்க வாகனத்தில் எழுந்தருளி, தரிசனம் தந்தாள். ராவண சம்ஹாரத்துக்காக ராமருக்கு அருள் புரிந்து மறைந்தாள் (இந்த இடத்தில், மகா விஷ்ணு எடுத்த மச்சாவதாரம் தொடங்கி ராமாவதாரம் வரை அனைத்து அவதாரங்களையும் சொல்லி, அவற்றின் பெருமைகளையும் சொல்லி இருக்கிறாள் அம்பிகை).
ஸ்ரீராமனின் வழியில் நாமும், அற்புதமான இந்த நவராத்திரி தினங்களில் அம்பாளை வழிபட்டு அனுகூலம் பெறுவோம்