Tuesday, April 1, 2014

ஏழு பெண் தேவதைகள்

தமிழகம் முழுக்க உள்ள கிராமங்களில் எண்ணற்ற எல்லை தெய்வங்கள் உண்டு. அவற்றின் வரலாறுகளும் சிறப்புகளும் மெய்சிலிர்க்கச் செய்பவை. கேட்கக் கேட்கத் திகட்டாத அந்த கிராம தெய்வங்கள் கதைகளில், ஏழு பெண் தெய்வங்களின் கதை பிரசித்தி பெற்றது. அவற்றில் ஒரு சுவைமிக்க வரலாறு இங்கே...

பொதிகை மலை அடிவாரத்தில் வாழ்ந்த ஒரு விவசாயிக்கு ஏழு பெண் பிள்ளைகள் இருந்தனர். அவர்களுக்குத் திருமணம் செய்துவைக்க முடியாமல் பெற்றோர் தவிக்க, அந்த ஏழு கன்னிப் பெண்களும் ஆற்றங்கரையில் மண்ணால் சிவலிங்கம் செய்து, தங்கள் பெற்றோரின் கவலையைப் போக்குமாறு சிவபெருமானை வேண்டினர்.

அவர்கள் பக்திக்கு இரங்கிய சிவபெருமான் ஒரு திருவிளையாடல் புரிய எண்ணினார். ஒரு விவசாய இளைஞன்போல உருவெடுத்து அங்கு சென்று, பூஜை செய்து கொண்டிருந்த பெண்களைத் தழுவ முயன்றார். "யாரோ ஒருவன் வந்து நம்மை மானபங்கப்படுத்தப் பார்க்கிறானே' என்று மிரண்டு போன பெண்கள், திசைக் கொருவராகக் காட்டிற்குள் ஓடியொளிந்தனர்.

இப்படிப் பிரிந்துபோன சகோதரிகள் மீண்டும் ஒன்று சேர ஓராண்டு ஆகிவிட்டது. அந்த ஏழு சகோதரிகளில் காத்தாயி என்பவள் மட்டும் இடுப்பில் கைக்குழந்தையை வைத்துக் கொண்டு வந்தாள். மற்ற சகோதரிகள் குழப்பமடைந்து, "''உனக்கு ஏது இந்தக் குழந்தை?'' எனக் கேட்டனர்.

அதற்கு காத்தாயி, "''பூஜை செய்தபோது நம்மைத் துரத்திய அந்த ஆண்மகன் என்னைப் பிடித்து பலவந்தப்படுத்தி விட்டான். அதனால் உண்டானது இந்தக் குழந்தை'' என்றாள். ஆனால் அதை சகோதரிகள் நம்பவில்லை. ``என்னை நீங்கள் நம்பவில்லையா? என்மீதே சந்தேகப்படுகிறீர்களே.

நான் சொல்வது உண்மை என்று நிரூபிக்க நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று அழுதபடி கேட்டாள். ``நீயும் உன் குழந்தையும் தீயில் இறங்கி வந்தால் நீ சொல்வதை உண்மை என நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்`' என்றனர் மற்ற சகோதரிகள். அதன்படியே தீ மூட்டிய காத்தாயி, அதில் தன் குழந்தையோடு இறங்கி நடந்து வந்தாள்.

அப்போது அவர்களுக்குக் காட்சி கொடுத்த சிவபெருமான், "இவையெல்லாம் என் திருவிளையாடல்களில் ஒன்று. நீங்களெல்லாம் எம்மைக் கண்டு பயந்து ஓடி ஒளிந்த அந்த ஏழு ஊர்களிலேயே தெய்வங்களாய் குடிகொண்டு மக்களின் துயரங்களைப் போக்குங்கள்.

மக்களும் உங்களையே முதன்மைப்படுத்துவார்கள். உங்களுக்கு ஏவலர்களாக காவலர்களாக பூமாலையப்பர், செம்மலையப்பர், முத்தையா, ராயப்பா, கருப்பையா உள்ளிட்ட ஏழு முனிகளும் உடனிருந்து செயல்படுவார்கள்'' என்றருளி மறைந்தார்.

அவர்களும் அவ்வாறே கோவில் கொண்டார்கள். சன்னாசி நல்லூர் பார்வதி அம்மன், புலியூர் பட்டத்தாள், காளிங்கராய நல்லூர் அருந்தவம், வ. சித்தூர் பூவாள், குமாரை பச்சையம்மன், வெங்கனூர் மறலியம்மன் என்னும் காத்தாயி, அரகண்ட நல்லூர் பூங்காவனம் ஆகியோரே அந்த ஏழு தெய்வங்கள்.

இவர்களில் சன்னாசி நல்லூர் பார்வதி அம்மன் மூத்தவள். மேற்கண்ட ஏழு ஊர்களும் பெரம்பலூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் அமைந்துள்ளன. இந்த ஏழு ஊர்களிலும் இந்த ஏழு அம்மன்களின் ஆட்சிதான் கொடிகட்டிப் பறக்கிறது. இந்த ஏழு ஊர்களில் மட்டுமல்ல; மற்ற கிராமங்களிலும் தீமிதித் திருவிழா நடைபெற இதுவே காரணம் என்கிறார்கள்.

ஆடி மாதம் முதல் வெள்ளியன்று சன்னாசி நல்லூர் பார்வதி அம்மன் கோவிலில் தீமிதி விழா தொடங்கும். அதற்கு அடுத்த வெள்ளி புலியூர் அம்மனுக்கும், அடுத்த வெள்ளி சித்தூர் அம்மனுக்கும், அடுத்த வெள்ளி குமாரை பச்சையம்மன் மற்றும் காளிங்கராய நல்லூர் அருந்தவத்திற்கும், அடுத்து வெங்கனூர் காத்தாயிக்கும், கடைசி வெள்ளி அரகண்ட நல்லூர் பூங்காவனத்தம் மனுக்கும் தீமிதித் திருவிழா நடக்கும்.

இப்படி வரிசையாக நடப்பது இங்கு மட்டுமே என்கிறார்கள். இந்த ஏழு கோவில்களையும் பச்சையம்மன் கோவில்கள் என்றே அழைக்கின்றனர். கடலூர் மாவட்டம், திட்டக்குடியிலிருந்து வடக்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் பெருமுளை முத்தையா கோவிலும்; அங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் குமாரை பச்சையம்மன், பூமாலையப்பர் கோவிலும்;

திட்டக்குடியிலிருந்து மேற்கே 15 கிலோமீட்டர் தூரத்தில் சித்தூர், வெங்கனூர் அம்மன் கோவில்களும்; திட்டக்குடியிலிருந்து தென்கிழக்கே வெள்ளாற்றைக் கடந்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் காளிங்கராய நல்லூர் அம்மனும்; அங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் சன்னாசி நல்லூர் அம்மனும் கோவில் கொண்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம், தென்பெண்ணையாற்றின் வடகரையில் உள்ளது அரகண்ட நல்லூர் அம்மன் கோவில்.

No comments:

Post a Comment