Wednesday, October 15, 2014

புராதன நகரமான கோலார் கங்க மன்னர்கள் ஆண்ட காலத்தில் அதன் தலைநகராக இருந்தது

புராதன நகரமான கோலார் கங்க மன்னர்கள் ஆண்ட காலத்தில் அதன் தலைநகராக இருந்தது. அப்போது கோலாரின் 'பெயர் குலுவலா' பத்தாம் நூற்றாண்டில் தமிழகம் தொடங்கி கோலார் வரை சோழ மன்னர்கள் ஆட்சியில் இருந்தது. கி.பி.977ம் ஆண்டில் ராஜராஜ சோழன் ஒசக்கோட்டையை
கைப்பற்றினார். கோலார் மாவட்டம் முழுவதும் சோழர்கள் கட்டிய கோவில்கள், பழந்தமிழ் கல்வெட்டுகளுடன் இன்றும் உள்ளன. பின்னர் குவளால புரமான கோலார் நகரின் அருகே தங்கம் கிடைத்ததால் தங்கவயல், கோலார் தங்கவயல் என பெயர் பெற்றது. பூமி மகள் எனப்பொருள் கொண்ட ஆவணிக்குன்றில் சீதாதேவி கோவிலும், குன்றின் அடிவாரத்தில் சிவன் சக்தி கோவில்களும் சோழர்களால் கட்டப்பட்டவை. ஜெயங் கொண்ட சோழன், இந்த பகுதியை வென்றதன் நினைவாக முல்பாகல் அருகே சோமேஸ்வரர் ஆலயம் கட்டப்பட்டுள்ளது.

கோலாரின் அருகே உள்ள இயற்கை எழில் கொஞ்சும் நந்தி மலை பாலாற்றின் பிறப்பிடம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நந்தி மலை பலம் வாய்ந்த கோட்டையாக திகழ்ந்தது. ஹரப்பா, மொகஞ்சதாரோ அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்த தங்க ஆபரணங்களின் தரம் தங்கவயலின் தங்கத்தை போன்றே தரமானதாக இருந்ததாகவும், ஆதி காலத்தில் இருந்தே தங்கவயல் பகுதியில் தங்கம் எடுக்கப்பட்டுள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அந்த காலத்தில் தங்கத்தை பாதுகாக்கும் கருவூலமாக நந்தி மலைக்கோட்டை பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர் பாதரி குட்வில் எழுதி உள்ளார்.

தங்கவயலின் மேற்கே சுமார் 15 கி.மீ. தொலைவில் பூதிக்கோட்டை உள்ளது. திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலி இந்த கோட்டையில் தான் பிறந்தார். தற்போது மூவாயிரம் மக்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் கடந்த 2002ம் வருடம் முதல் நாட்டின் முதல் சமுதாய வானொலி செயல்பட்டு வருகிறது.நம்ம குரல் என்ற பெயரில் செயல்பட்டு வரும் பல்நோக்கு ஊடக மையம் செயற்கைகோள் வசதியுடன் 15 சுய உதவி குழுக்களுடன் செயல்பட்டு வருகிறது. மைசூர் சமஸ்தானத்தின் கமிஷனராக இருந்த மார்க் கப்பன் என்பவரின் முயற்சியால் 1859ம் ஆண்டு கோலார் பேட்டையில் இருந்து பெங்களூருக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டது.

கோலார் செல்லும் சாலை அருகே ரயில் நிலையம் அமைக்கப்பட்டு அந்த நிலையத்திற்கு கோலார் ரோடு ஸ்டேஷன் எனப் பெயரிடப்பட்டது. பின்னர் கமிஷனராக இருந்த லெவின் பெந்தாம் பௌரிங் என்பவரின் நினைவாக பவுரிங் பேட் என பெயர் மாறியது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு அந்த நிலையம் பங்காருபேட்டையாக மாறியது. தங்கவயலின் தங்க பூமி கோலார் நகரின் அருகில் இருந்ததால், கோலார் கோல்டு பீல்டு மற்றும் கோலார் ஆகியவை இருவேறு நகரங்கள் என்பதை அறியாத வெளியூர் ஆட்கள் குழப்பமடைந்தனர். இதனால் ஆரம்ப நாட்களில் கோலார் செல்ல வேண்டியவர்கள் தங்கவயலுக்கும், தங்கவயல் செல்ல வேண்டியவர்கள் கோலாருக்கும் வழி தவறி அவதிப்பட்டனர். தமிழகத்தில் விவசாய கூலிகளாக இருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கச்சுரங்கத்தில் வேலை கிடைப்பதை கேள்விபட்டு தேடி வந்தபோதும் இந்த குழப்பம் ஏற்பட்டது.

எனவே கோலார் தங்கவயல் சுரங்கம் செல்வதற்காக, “ கொத்த கொட்ட கோலாரு” செல்ல வேண்டும் என்று விசாரித்தனர். சுரங்கத்தில் கொத்துவதற்கும் (தோண்டுவதற்கு) மண்ணை வாரி கொட்டுவதற்குமான கோலாருக்கு செல்ல வேண்டும் என விவரமாக விசாரித்து தங்கவயலை அடைந்தனர். அந்த நாளில் தங்கவயல் வெளியூர் தொழிலாளர்களால் ' கொத்த கொட்ட கோலாரு' என்றே அழைக்கப்பட்டு வந்தது. பால், பட்டு, தங்க உற்பத்திக்கு புகழ் பெற்ற கோலார் மாவட்டம் கம்மசந்திராவில் உள்ள கோடி லிங்கேஸ்வரர் கோவிலுக்கும் புகழ் பெற்றுள்ளது.

பல ஆயிரக்கணக்கான லிங்கங்கள் அணி வகுத்து காட்சி தரும். இந்த கோவிலில் 108 அடி பிரமாண்டமான லிங்கமும் உள்ளது. கங்கர்கள் காலத்தில் திராவிட பாணியில் கட்டப்பட்ட கோலாரம்மா கோவில் 11 நூற்றாண்டில் சோழ மன்னர்களால் புனரமைக்கப்பட்டது. அதே நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்ட சோமேஸ்வரர் கோவில் திராவிட சிற்பகலையின் எழிலோடு திகழ்கிறது. புராதன சாம்ராஜ்ஜியங்களின் தலைநகரமாக விளங்கிய கோலார் மாவட்டத்தில் பாலாறும் தென் பென்னையாரும் கரைபுரண்டு ஓடிய காலம் இருந்தது.

தற்போது கோலார் ஒரு வறட்சி மாவட்டமாக வாடி வதங்கி கிடக்கிறது. கர்நாடக மாநிலத்தின் அதிக ஏரிகள் இருந்த மாவட்டமாக திகழ்ந்த கோலார் மாவட்டம் ஏரிகள் வறண்டு போனதுடன் ஆக்கிரமிப்புகளால் காணாமல் போய்விட்டது. இயற்கையின் சதியும் இணைந்து பல வருடங்களாக மழை பொய்த்து போனது. நிலத்தடி நீரும் வரண்டு நிரந்தர நீர் ஆதார திட்டம் வேண்டி மாவட்ட மக்கள் பல வருடங்களாக போராடி வருகிறார்கள்

No comments:

Post a Comment