Saturday, January 10, 2015

பிரம்மாவின் வழித்தோன்றல்களில் ஒருவனான தட்சப்பிராஜாபதி

பிரம்மாவின் வழித்தோன்றல்களில் ஒருவனான தட்சப்பிராஜாபதி என்பவனுக்கு நெடுநாள் புத்திர பாக்கியம் இல்லாமலிருந்து, பின் ஒன்றன் பின் ஒன்றாக 27 பெண்கள் பிறந்தனர்! அவர்களுக்கு அஸ்வினி, பரணி எனத் தொடங்கி இறுதியாக ரேவதி வரை நட்சத்திரங்களின் பெயரை வைத்து அருமையாக வளர்த்து வந்தான். நாளடைவில் மணப்பருவம் எய்திய அவர்கள் தங்கள் பெயர்களுக்கு ஏற்ப நட்சத்திரங்களைப் போல் மினுக்கினார்கள்!


காலாகாலத்தில் அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்துத் தன் கடமையை நிறைவேற்றிட நிச்சயம் செய்த தட்சன், இவர்கள் ஒவ்வொருவருக்காக வரன் தேடிக் கண்டு பிடித்து அல்லல்படுவதை விட, ஒருவனுக்கே எல்லாப் பெண்களையும் மணமுடித்து விட்டால் தன் பாரம் தீருமே என்று யோசித்தான்! அந்த நேரம் பார்த்து அனுசுயா தேவியின் புதல்வனான சந்திரன் அவர் கண்களில் பட்டான். சந்திரன் பேரழகு வாய்ந்தவன். அவனை மாப்பிள்ளையாகப் பிடித்துப் போட்டால் என்ன என்று தோன்றியது அவருக்கு. தன் பெண்களிடம் சந்திரனைக் காட்டி பிடித்திருக்கிறதா சொல்லுங்கள். மீதியை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். மன்மதனையொத்த சந்திரனைக் கண்ட பெண்கள் 27 பேரும் ஒரே குரலில் சம்மதம் சொல்லி விட்டார்கள்!

பெண்களின் சம்மதத்தைப் பெற்றுவிட்ட தட்சன் நேரடியாக சந்திரனைச் சந்தித்து விஷயத்தைக் கூற, அவன் கடைக்கண்ணால் ரோகிணியையும், கார்த்திகையையும் பார்த்தபடி புன்னகைத் தவழ நின்று கொண்டிருந்தான். ஏனெனில் தட்சனின் பெண்களில் இவர்கள் இருவரும்தான் மகா அழகு! ரோகிணி, கிருத்திகையோடு மீதம் 25 பெண்களையும் "ஏதோ இலவச இணைப்புபோலத் திருமணம் செய்து தருகிறேன் என்கிறாரே மனுஷன்!' என்று நினைத்த சந்திரன் கடைசியில் அனைவரையும் மணக்க சம்மதிக்கிறான். திருமணம் வெகு சிறப்பாய் நடைபெற்றது. கொஞ்ச காலம் சந்திரன் தன் 27 மனைவிகளுடன் மிகச் சந்தோஷமாய் வாழ்ந்தான்.

காலம் செல்லச் செல்ல அவன் ரோகிணியைத் தவிர மற்ற மனைவிகளை ஏறெடுத்துக்கூடப் பார்ப்பதில்லை. ரோகிணியின் அழகு அப்படி அவனை ஈர்த்துக் கட்டிப் போட்டது. மற்ற பெண்கள் அனைவரும் ஒன்று திரண்டு தங்கள் தந்தையாரிடம் சென்று அழுது புலம்பி தங்கள் கணவன் மிகுந்த பாரபட்சத்துடன் இருப்பதாகச் சொல்லி வருந்தினார்கள். தட்சனுக்கு மகாக் கோபம் வந்து விட்டது. விறுவிறுவென்று சந்திரனிடம் சென்று ""ஏய் சந்திரா..! (கோபத்தில் மாப்பிள்ளை என்ற மரியாதை கூட போய்விட்டது) இவர்களைக் கல்யாணம் செய்து கொடுக்கும்போதே நீ எல்லோரிடமும் சமமாக அன்பு காண்பித்து அனைவரையும் சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும் என்று சொன்னேனே நினைவிருக்கிறதா? இப்போது இவர்கள் எல்லோரையும் தவிக்க விட்டு விட்டு ரோகிணி பின்னால் மட்டுமே சுற்றிக் கொண்டு இருக்கிறாயாமே... உன் அழகு உனக்கு கர்வத்தைக் கொடுத்து விட்டதா? இந்த அழகு இருப்பதால்தானே நீ இப்படித் துள்ளுகிறாய்? போ! இன்று முதல் தினம் ஒரு கலையாகத் தேய்ந்து ஒளி குன்றி எல்லோராலும் ஏளனமாகப் பார்க்கப்பட்டு அலைவாய், போ!' என்று சாபமிட்டு விட்டான் தட்சன்.

முதலில் சந்திரன் தட்சனின் சாபத்தைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் ஒவ்வொரு நாளும் தன் கலைகளில் ஒன்று ஒன்றாய்க் குறைந்து தன் அழகு மங்குவது கண்டு திகிலடைந்தான். உடனே இந்திரனிடன் ஓடி விஷயத்தைக் கூறித் தன்னைக் காப்பாற்ற வேண்டுகிறான். அவனோ, ""நீ என்னிடம் வருவதற்குப் பதிலாய் பிரம்மனிடம் போயிருக்க வேண்டும். தட்சன் பிரம்மனின் மானஸ புத்திரன் அல்லவா? அதனால் பிரம்மா சொன்னால் தட்சன் கேட்பான்'' என்று சொல்லி விடுகிறான்.

உடனே, பிரம்மாவிடம் ஓடித் தன்னைக் காப்பாற்ற வேண்டுகிறான். பிரம்மாவோ, ""நீ நினைப்பது போல் தட்சன் என் சொல்லைக் கேட்க மாட்டான். சந்திரா... உனக்கு ஒரே வழி. நேரே ஓடிப்போய் சிவபெருமான் முன்பு விழுந்து அவர் கால்களைப் பிடித்துக் கதறி வேண்டிக்கொள். அவர் ஒருவர்தான் உன்னைக் காப்பாற்ற முடியும்'' என்கிறான். இதற்குள் 14 நாள்கள் கடந்து விடவே சந்திரன் மீதமிருக்கும் ஒரே ஒரு கலையுடன் சிவபெருமான் முன்பு விழுந்து வணங்கி காப்பாற்ற வேண்டுகிறான்.

சிவபெருமானும் அன்புடன் அவனை எழுப்பி நிறுத்தி, "சந்திரனே! கவலைப்படாதே. உன்னைக் காப்பாற்றுகிறேன் உன்னிடம் மீதமிருக்கும் இந்த ஒரு கலையை என் முடியில் சூடிக் கொள்கிறேன். அதனால் அது அழியாமல் மீண்டும் ஒவ்வொரு கலையாய் ஒவ்வொரு நாளும் வளர்ந்து நீ பூரணக் கலைகளோடு பிரகாசமாய் திகழ்வாய். ஆனால் அதே நேரம் தட்சனின் சாபத்தை என்னால் முழுமையாகப் போக்க முடியாது. அதனால் மீண்டும் ஒவ்வொரு நாளும் ஒரு கலையாய்க் குறைந்து, மீண்டும் ஒவ்வொரு கலையாய் வளர்ந்து -இப்படி மாறி மாறித் தேய்ந்து, வளர்ந்து வருவாய்!'' என்று அருள்பாலிக்கிறார்

No comments:

Post a Comment