Friday, July 29, 2016

சென்னை பள்ளிக்கரணையில் ராகு & கேது பரிகாரத் தலம்!

சென்னை பள்ளிக்கரணையில்
ராகு & கேது பரிகாரத் தலம்!

 அந்தக் காலத்திலேயே ராகு- கேது தோஷங்களுக்கான பரிகாரத் தலமாகத் திகழ்ந்த ஆலயம் இது என்று சென்னை பள்ளிக்கரணை ஸ்ரீஆதிபுரீஸ்வரர் ஆலயத்தைப் போற்றுகின்றனர் பக்தர்கள். இன்றைக்கும் இங்கு வந்து வேண்டிக் கொண்டால், ராகு கேது தோஷங்கள் விலகும். சந்தோஷம் பெருகும் என்பது ஐதீகம்!

   கிழக்கு பார்த்தபடி ஸ்ரீஆதிபுரீஸ்வரரும் ஸ்ரீசாந்த நாயகியும் ஒரே கருவறையில் இருந்தபடி அருள்பாலிக்கின்றனர். இங்கு, ஸ்ரீவிநாயகரையும் ஸ்ரீஆஞ்சநேயரையும் ஒரே இடத்தில் நின்றபடி தரிசிக்கலாம். இந்தத் தலத்துக்கு வந்து, இறைவனையும் இறைவியையும் வணங்கி வழிபட்டால், திருமண தோஷம்  நீங்கும். கல்யாண வரம் கிடைக்கும்; ஸ்ரீவிநாயகரையும் ஸ்ரீஆஞ்ச நேயரையும் வழிபட்டால், சனி தோஷம் விலகும் என்கின்றனர் பக்தர்கள்!

  ஸ்ரீவிநாயகர், ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீமுருகப் பெருமான், ஸ்ரீமகா விஷ்ணு, ஸ்ரீபிரம்மா, ஸ்ரீதுர்கை, ஸ்ரீதட்சிணா மூர்த்தி, ஸ்ரீசரஸ்வதிதேவி, ஸ்ரீமகா லட்சுமி ஆகியோருக்கான சந்நிதிகள் உள்ளன. வியாக்ரபாதரும் பதஞ்சலி முனிவரும் சாந்நித்தியத்துடன் காட்சி தந்து அருள்பாலிக்கின்றனர். தவிர, அறுபத்து மூவருக்கும் கல் விக்கிரகங்கள் அமைக்கப்பட்டு உள்ளது சிறப்பு!

  ஸ்தல விருட்சம்- வில்வம். அத்துடன் செண்பக மரம், வேம்பு, அரச மரம், மகிழ மரம், வன்னி மரம் ஆகியனவும் உள்ளன. இப்படி விருட்சங்கள் சேர்ந்திருப்பதைத் தரிசித்தால், நம் சந்ததியும் விருட்சம் போல் வளரும் என்பது உறுதி!

  கருணாமூர்த்தியாக ஸ்ரீஆதிபுரீஸ்வரரும் அன்பும் அரவணைப்பும் கொண்டவளாக ஸ்ரீசாந்தநாயகியும் அருள்பாலிக்கும் அற்புதமான இந்தத் தலம்,
  மேலும் நந்தியம்பெருமானுக்கு திருமணம் நடைபெறும் திருத்தலங்கள் மிகக் குறைவு. திருமழபாடி முதலான தலங்கள் போல் இங்கேயும் நந்திதேவருக்கு திருக்கல்யாண வைபவம் சிறப்புற நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டால், தடைப்பட்ட திருமணம் நடந்தேறும். பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள்!

 செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஸ்ரீசாந்தநாயகியையும் பிரதோஷம் முதலான புண்ணிய நாளில் ஸ்ரீஆதிபுரீஸ்வரரையும் வந்து வணங்குங்கள். ராகுகேதுவால் உண்டான தோஷங்கள் விலகி ஆனந்தமாக வாழலாம்!

நடை திறந்திருக்கும் நேரம் :
காலை 7 முதல் மதியம் 12.30 மணி வரை.
மாலை 4 முதல் இரவு 8.30 மணி வரை.

No comments:

Post a Comment