Monday, March 7, 2016

பேச்சாற்றல் வழங்கும் பேச்சியம்மன்

பேச்சாற்றல் வழங்கும் பேச்சியம்மன்



 பேச்சு வராதவர்கள், பேச்சுக் குறைபாடு உடையவர்களுக்கு  அவர்கள் குறைபாட்டை நீக்கியும், பேச்சாற்றல் வேண்டுபவர்களுக்குப் பேச்சுத் திறனையும், கல்வி கற்கும் மாணவர்களுக்குக் கல்வியில் சிறப்பிடத்தையும் வழங்கி  அருளுகிறார் மதுரையில் கோவில் கொண்டிருக்கும் பேச்சியம்மன்.

பேச்சியம்மன் வரலாறு

ஒரு குடும்பத்தில் சகோதரர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, அவர்களிடமிருந்து இளைய சகோதரன் ஒருவன் மட்டும் பிரிந்து சென்றான். பிரிந்து சென்ற அவன் நீண்ட நாட்களுக்குப் பிறகு, தொலைவிலிருந்த ஒரு ஊரைச் சென்றடைந்தான். அவனுக்கு அந்த ஊரிலிருந்த பேச்சி எனும் பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பின் தொடர்ச்சியாக அவன், அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டான். இந்தத் திருமணத்திற்கு அந்த ஊரிலிருந்த பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த தம்பதியரால் ஊரில் இருக்க முடியாத நிலை ஏற்பட்டது. அவர்கள் இருவரும் அங்கிருந்து வெளியேறி அருகில் இருந்த காட்டுப்பகுதியில் குடிசை போட்டு வசித்து வந்தனர்.

இந்நிலையில், தங்கள் குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்ற சகோதரனைத் தேடி, அவனுடைய மற்ற சகோதரர்கள் அந்த ஊருக்கு வந்தடைந்தனர். தம்பியைப் பற்றி விசாரித்தபோது, அவன் அங்குள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும், ஊரார் எதிர்ப்பு தெரிவித்ததால், காட்டுப் பகுதியில் வசித்து வருவதாகவும் தகவல் கிடைத்தது. இதனால் மிகவும் கவலையடைந்த அவர்கள் காட்டுக்குள் வசிக்கும் தங்கம் சகோதரனைத் தேடிச் சென்றனர். அங்கு ஆடு மேய்க்கும் சிலர், அவர்களுடைய சகோதரனும், அவன் மனைவியும் காட்டுக்குள் இருக்கும் இடத்தைத் தெரிவித்தனர்.

அந்த இடத்திற்குச் சென்ற அவனது சகோதரர்கள், தங்கள் சகோதரனையும், கர்ப்பிணியான அவன் மனைவியையும் பார்த்தனர். பின்னர் சகோதரனை மட்டும், தங்களுடன் வந்துவிடும்படி அழைத்தனர். அவன் தன்னுடைய கர்ப்பிணி மனைவியை விட்டு வர முடியாது என்று மறுக்க, கோபம் கொண்ட அவனுடைய மூத்த சகோதரர்கள் அனைவரும் சேர்ந்து அவனது மனைவியை கர்ப்பிணி என்றும் பார்க்காமல் கொன்றுவிட்டனர். அவர்களைத் தடுக்கச் சென்ற சகோதரனும் கொல்லப்பட்டான்.

இதைக் கண்ட ஊர்க்காரர்கள், ‘கருவுற்ற பெண்ணைக் கொன்றதால் தங்கள் ஊருக்கு ஏதாவது தீயசெயல்கள் நடந்து விடக்கூடாதே?’ என்று அச்சமடைந்தனர். இதையடுத்து ஊர் பெரியவர்கள் அனைவரும் பேசி, அந்தப் பெண்ணுக்கு ஒரு கோவில் எழுப்பி வணங்கி வர முடிவெடுத்தனர். அந்த வழிபாடே பேச்சியம்மன் வழிபாடு என்று கூறப்படுகிறது. செவி வழிக் கதையாக இது உள்ளது. அதே நேரத்தில் காளியம்மனின் மற்றொரு தோற்றம்தான் பேச்சியம்மன் என்பதும் சிலரது கருத்தாக உள்ளது.

இது தவிர மற்றொரு கதையும் சொல்லப்படுகிறது. அதையும் பார்க்கலாம்.

வல்லாளன் என்ற அரசன் மிகவும் கொடுங்கோலனாக இருந்தான். அவனுடைய எல்லா கொடுமைகளுக்கும் அவனுடைய மனைவியும் உறுதுணையாக இருந்தாள். இதனால் அந்நாட்டு மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகினர். அவனது மனைவியின் பிரசவ நேரத்தில், அவனுக்குப் பிறக்க இருக்கும் குழந்தையின் உடல் இந்தப் பூமியைத் தொட்டவுடன் அவன் அழிந்து விடுவான் என்றும், மாறாக அது பூமியைத் தொடாமல் ஒரு நாள் இருந்து விட்டால், அதற்குப் பிறகு அவனுக்கு அழிவே இருக்காது என்றும் அவன் ஒரு சாபம் பெற்றிருந்தான். இந்தச் சாபத்தை அறிந்த அந்நாட்டு மக்கள், அவனுக்குப் பிறக்கும் குழந்தை தன் கொடூரத்தால் நாட்டையே அழித்து விடும் என்று பயந்து கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் அவனது மனைவி கருவுற்றாள். பிறக்கும் குழந்தை பூமியை உடனே தொட்டுவிட்டால் தனக்கு மரணம்  ஏற்படும் என்றாலும், அந்தச் சாபம் தோல்வி அடைந்து விட்டால் அதற்குப் பிறகு தனக்கு அழிவே கிடையாது என்பதால், மனைவியின் பிரசவத்தின் போது, குழந்தையின்  உடல் பூமியைத் தொடாதபடி பிரசவம் பார்ப்பதற்கு ஏற்ற பெண்மணியைத் தேடி வந்தான்.

அவனது மனைவிக்குப் பிரசவ நேரம் நெருங்கியது. அரசனான அவன் தனது மனைவிக்குப் பிரசவம் பார்க்கத் தகுந்த மருத்துவச்சியை அழைத்து வரச் சென்றான். அப்போது அவன் எதிரில் வயதான ஒரு பெண்மணி வந்து கொண்டிருந்தாள். அவன் அவளிடம் யாரென்று விசாரித்தான். அவள் தனது பெயர் பெரியாச்சி என்றும், தான் ஒரு மருத்துவச்சி என்றும் சொன்னாள்.
அரசன் மகிழ்ச்சியடைந்தான். அவளிடம், ‘நான் இந்நாட்டின் அரசன். எனது மனைவிக்குப் பிரசவம் பார்க்க வேண்டும். பிறக்கும் குழந்தை பூமியைத் தொடாமல் ஒரு நாள் முழுவதும் பார்த்துக் கொண்டால், நிறைய பொன்னும் பொருளும் தருவதாகச் சொன்னான். வயதான அந்தப் பெண் மணியும் அதற்குச் சம்மதித்து அவனுடன் அரண்மனைக்குச் சென்றாள்.



அந்தப் பெண்மணி அரசிக்கு நல்லமுறையில் பிரசவம் பார்த்து, குழந்தையைப் பூமியில் பிறக்கும்படியாக விடாமல், தன் கைகளில் ஏந்திக் கொண்டாள். அரசனின் விருப்பப் படியே பிரசவம் பார்த்த அவள், தனக்குத் தருவதாகச் சொன்ன பொன்னையும் பொருளையும் உடனடியாகத் தரும்படி அவனிடம் கேட்டாள். அவன் அதைத் தராமல், அவளைத் தன்னுடைய அடிமை என்றும், இனி அரண்மனையை விட்டு வெளியேற முடியாது என்றும் சொல்லி மூதாட்டியை இகழ்ந்து பேசினான்.

இதைக் கேட்டு கோபம் கொண்ட அந்தப் பெண்மணி, பயங்கர தோற்றம் கொண்டவளாக உருமாறினாள். அரசனைக் கீழே தள்ளி அவனைத் தன் கால்களால் மிதித்துக் கொண்டு, அவன் மனைவியைத் தூக்கித் தன் மடியில் போட்டுக்கொண்டு அவள் வயிற்றைத் தன் கரங்களால் பிளந்தாள். அந்த அரசனையும் காலால் மிதித்துக் கொன்றாள். கொடுங்கோல் ஆட்சி புரிந்த அரசனும், அவன் மனைவியும் அழிக்கப்பட்டார்கள் என்று அறிந்த அந்நாட்டு மக்கள், அனைவரும் அங்கு ஒன்று கூடினர்.

அரசனையும், அவன் மனைவியையும் அழித்து, தங்களைக் காப்பாற்றியது ‘பெரியாச்சி’ என்ற பெயரில் வந்திருந்த காளியம்மன் என்பதையும் தெரிந்து கொண்டனர், அன்னையை வணங்கினர். தங்களைக் காப்பாற்றிய அம்மனுக்கு ‘பெரியாச்சியம்மன்’ என்ற பெயரிலேயே கோவில் அமைத்து வழிபட்டு வந்தனர். இந்தப் பெரியாச்சியம்மன் என்பதே நாளடைவில் ‘பேச்சியம்மன்’ என்றாகிப் பல இடங்களில் கோவில் கொண்டு விட்டார் என்பதாக கூறப்படுகிறது.

இது ஒரு புறம் இருக்க, கல்விக் கடவுளான சரஸ்வதியின் மறு தோற்றம்தான் பேச்சியம்மன். பேச்சு அம்மன் என்றிருந்ததே பின்னர் பேச்சியம்மன் என்று மருவிவிட்டது என்று சொல்பவர்களும் உண்டு.

பேச்சியம்மன் குறித்த வரலாற்றுத் தகவல்கள் ஒவ்வொன்றும் வேறாக இருந்தாலும், பேச்சியம்மனுக்குத் தமிழ்நாடு மட்டுமின்றி இலங்கை, சிங்கப்பூர் மற்றும் மலேசிய நாடுகளிலும் அதிகமான கோவில்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இப்படி அமைந்த கோவில்களில் மதுரை, சிம்மக்கல் பகுதியில் அமைந்திருக்கும் பேச்சியம்மன் கோவிலும் ஒன்று.

பேச்சியம்மன் கோவில்

மதுரை மாநகரின் சிம்மக்கல் பகுதியில் வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஆலயத்தில் வீற்றிருக்கும் அம்மன் சுயம்பு மூர்த்தியாவார். இந்த ஆலயத்தில் உள்ள பேச்சியம்மன் வலது புறம் ஓங்கிய கையுடனும், இடது கையில் குழந்தையுடனும், காலில் அரக்கனை மிதித்து இருப்பது போன்றும் இருக்கிறது. இந்தப் பேச்சியம்மனைச் சரஸ்வதியின் மற்றொரு தோற்றமென்று இந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஆலயம் எழுநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த ஆலய வளாகத்தினுள் பேச்சியம்மன் தவிர, விநாயகர், முருகன், மீனாட்சி சுந்தரேஸ்வரர், மகாலட்சுமி, சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி, காளி, துர்க்கை, தத்தாத்ரேயர், ஆஞ்சநேயர், நவக்கிரகங்கள், கருப்பசாமி, இருளப்பசாமி, அய்யனார், வீரமலை, பெரியண்ணன், சின்னண்ணன், சப்த கன்னியர், நாகர் உள்பட 21 தெய்வங்களுக்கான சிலைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

பேச்சுக் குறைபாடு உள்ளவர்கள், பேச்சாற்றல் வேண்டுபவர்கள் இந்த அம்மனை வணங்கினால் குறைகள் நிவர்த்தியாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. கல்விக் கடவுளான சரஸ்வதியின் மறுதோற்றமாகக் கருதப்படும் இந்த அம்மனை வழிபட்டு மாணவர்கள் தங்கள் கல்வியில் சிறப்பிடத்தைப் பெற முடியும். ராகு, கேது தோஷமுடையவர்கள் இந்தக் கோவில் வளாகத்தில் உள்ள நாகரை வழிபட்டு, அதன் பிறகு அம்மனை வணங்கி நற் பலன்களைப் பெறலாம்.

சிறப்பு வழிபாடு

பேச்சியம்மனுக்கு நாள்தோறும் வழிபாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வெள்ளிக் கிழமைகளில் மதியம் 12 மணிக்கு அம்மனுக்குப் பாலாபிஷேகம் செய்து, சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. இது தவிர, நவராத்திரி நாட்களில் அம்மனுக்குச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

மதுரை மாநகரின் மத்தியப் பகுதியான சிம்மக்கல் பகுதியில் வைகை ஆற்றின் கரையில் இக்கோவில் அமைந்திருக்கிறது. மதுரை நகரில் இயக்கப்படும் பெரும்பான்மையான நகரப் பேருந்துகள் சிம்மக்கல் பகுதி வழியாகச் செல்கின்றன.

No comments:

Post a Comment