Wednesday, December 10, 2014

பஞ்சபூதத்தலங்களில் அப்புத்தலம் என்னும் நீருக்குரிய கோயிலாக விளங்குவது திருவானைக் காவல். திருச்சி

பஞ்சபூதத்தலங்களில் அப்புத்தலம் என்னும் நீருக்குரிய கோயிலாக விளங்குவது திருவானைக் காவல். திருச்சி அருகில் இவ் வூர் உள்ளது. இத்தலத்துசுவாமி சன்னதிக்குள் யானை செல்ல முடியாது என்பதால் "தந்திபுகாவாயில்' என்ற சிறப்புப் பெயர் உண்டு.


மேற்கு நோக்கிய நிலையில் சுயம்புமூர்த்தியாக மூலவர் ஜம்புகேஸ்வரர் காட்சி தருகிறார். பஞ்ச பூதத் தலங்களில் இது நீர் அம்சமாகப் போற்றப்படுகிறது. சுவாமி சன்னதியில் ஒன்பது வாயில் கொண்ட சாளரம் (ஜன்னல்) ஒன்று அமைந் துள்ளது. இதன் வழியாக இறைவனைத் தரிசித்தால் ஒரே நேரத்தில் கங்கை, காவிரி போன்ற ஒன்பது புனித தீர்த்தங்களில் நீராடிய புண்ணியம் உண்டாகும். கோச்செங்கட்சோழன் கட்டிய 70 மாடக்கோயில்களில் திருவானைக்காவலே முதன்மையானது. 

இறைவனே சித்தரைப் போல வந்து திருநீறை கூலியாகக் கொடுத்து கட்டிய மதில் ஒன்று இங்குள் ளது. இம்மதில் "திருநீற்றுமதில்' என்று அழைக்கப்படுகிறது. சோழமன்னன் காவிரியில் நீராடிய போது கழன்று விழுந்த முத்தாரம் ஒன்று, அங்கு நீர் மொண்டு வருவதற்காக கொண்டு செல்லப்பட்ட அபிஷேக குடத்துக்குள் கிடந்தது.

நீரை அபிஷேகம் செய்யும்போது, அந்த மாலை இறைவனின் கழுத்தில் விழுந்தது. நாள் தோறும் கோபூஜை நடைபெறுவதும், சுவாமிக்கு தினமும் அன்னாபிஷேகம் நடப்பதும், உச்சிக்கால பூஜையின் போது அர்ச்சகர் புடவை அணிந்து இறைவனைப் பூஜிப்பதும் இத்தலத்தின் சிறப்பம்சங்கள்.ஆதிசங்கரர் அகிலாண்டேஸ்வரி அம்மனை வழிபாடு செய்து தாடங்கப் பிரதிஷ்டை(அம்மனின் காதணியான கம்மலில் சக்கரப்பிரதிஷ்டை) செய்துள்ளார்.

http://aanmeegamarivom.blogspot.in/

No comments:

Post a Comment