Saturday, October 12, 2013

வட மாநிலங்களில் நவராத்திரி கொண்டாட்டம்

பெண்களுக்கான பெண் தெய்வத்திற்கான ஒரு உற்சவமே நவராத்திரி விழா. ஆனி அமாவாசைக்கு பிறகு வருவது ஆஷாட நவராத்திரி. புரட்டாசி மாத அமாவாசைக்கு பிறகு வருவது மகா நவராத்திரி. தை அமாவாசைக்கு பிறகு வருவது மகா நவராத்திரி. பங்குனி மாத அமாவாசைக்கு பிறகு வருவது வசந்த நவராத்திரி.
புரட்டாசி மாதமும், பங்குனி மாதமும் காலதேவனுடைய கோரைப்பற்கள் என்கிறது அக்கினிப்புராணம். ஜீவராசிகள் அக்கோரைப் பற்களில் அகப்பட்டு அவதியுறாதிருக்க நவராத்திரி விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
முதல் மூன்று தினங்களில் துதிக்கப்படும் தேவியின் கோப சக்தியே துர்க்கை. மகாவிஷ்ணுவின் வாயிலாக மதுகைடபர் என்ற அரக்கர்களை வதம் புரியச் செய்தவள். அக்கொடியவர்களை வதம் புரிந்தமை குறித்துச் செய்யப்படும் ஆராதனையே முதன் மூன்று தினங்களில் நடைபெறுகிறது.
அடுத்த மூன்று தினங்களில் வழிபாடு செய்யக்கூடிய தேவியே மகாலட்சுமி. அத்தேவியே கோபமாக மாறியபோது மகிஷாசுரமர்த்தினியாகத் தோன்றி மகிடாசுரன் என்னும் அசுரனை சம்ஹாரம் பண்ணினாள். அவளே நாராயணி எனவும் லட்சுமி துர்க்கை எனவும் கூறுவர்.
கடைசி 3 தினங்களில் துதிக்கப்படும் தேவியே சரஸ்வதி தேவி. சாந்தமான அத்தேவியே துஷ்டர்களான சும்ப நிசம்பர்களை சம்கரிக்க ஆக்ரோஷமாகத் தோன்றி வந்தாள் சரஸ்வதி துர்க்கையாக.
நவராத்திரியின் நிறைவு நாளே சரஸ்வதி பூஜை. கற்றவர் போற்றும் கலித்துவ நாயகி, கலைவாணி, கலா ரூபமயில் என்று கூறும் அறிஞர்கள் இத்தேவியை கலைச்செல்வி, பாரதி, வாலைப்பெண், கலைவாணி, நான்முகன் தேவி, வாக்தேவி, சாவித்திரி, வித்யாரூபிணி எனவும் பல பெயர்களால் அழைக்கிறார்கள்.
ஆயுத பூஜை அன்று அத்தேவிமார்களின் போர் ஆயுதங்களை நினைவுபடுத்தும் வகையில் அன்றாடம் நாம் கையாளும் பொருட்களையும், பிற ஆயுதங்களையும், அவற்றுடன் புத்தகங்கள் போன்றவற்றையும் அழகுற அடுக்கி வைத்து வணங்குவது அவற்றின் மீதும் இறை கடாட்சம் பெற வேண்டும் என்பதற்கே.
செய்யும் தொழிலே தெய்வம் என்பதற்கொப்ப தொழிற்தெய்வம் என்றழைக்கப்படும் சரஸ்வதியை பிரதானப்படுத்துகிறோம். தொழிலாளர் போற்றும் தெய்வமாக உள்ள தேவியை வணங்கி வழிபடுதல் சிறப்புக்குரியது.
சரஸ்வதி பூஜையின் அடுத்த நாளான தசமி நாளில் விஜயதசமியைக் கொண்டாடுகிறோம். அசுராதியர்கள் வதம் முடிந்து திருப்திகரமான மங்கள காரியங்கள் நடைபெறத் தொடங்கிய இன்பமான நாளே தசமி தினம். முப்பெரும் தேவியரும் கொடிய கோபம் கொண்ட நிலை மாறி சாந்த குணமடைந்த பொன்னாள். கல்வி பயின்றிட, இசைப்பயிற்சி, நடைப்பயிற்சி, அஸ்திரப்பயிற்சி, புதிய தொழில் தொடங்க வியாபாரம் போன்ற நற்காரியங்களை செய்வர். நவராத்திரியை வெளி மாநிலங்களில், வெளிநாட்டில் எவ்வாறு கொண்டாடுகின்றனர் என்பதை காண்போம்.
இங்கு எவ்வித உடல் குறையும் இல்லாத அழகிய சிறுமிகள் ஒன்பது பேரை தெரிந்து ஒன்பதுவித காய்கறிகளுடன் சமைத்து விருந்து வைத்து புசித்து விழாவை கொண்டாடுகின்றனர்.
விஜய தசமியன்று சமி என்னும் ஒருவகை மரத்துக்குப்பூஜையும் செய்கின்றனர்.
சுமேரியர்கள் அம்பாளை மலைமகளுக்கு அதிபதியான பர்வதர்த்தினியாக பாவித்துக் கொண்டாடுகின்றனர்.
பாபிலோனியாவில் ‘உமை’ என்னும் பெயரை ‘உம்மா’ என்று கூறி வழிபடுகின்றனர்.
ஆர்க்கேடியாவில் ‘உம்மி’ என்று அழைக்கப்படுகிறாள். ஸிரியோவில் ‘உம்மோ’ என்று அழைக்கப்படுகிறாள்.
வட நாட்டில் ராமாயண ரீதியாக கொண்டாடப்படுகிறது. விஜயதசமி அன்றுதான் ராவணனை ராமன் சம்ஹரித்து வெற்றிவாகை சூடினான் என்பது ஐதீகம். அதனால்தான் ‘‘ராம்லீ’’ உற்சவமாக கொண்டாடுகின்றனர்.
ராவணன், கும்பகர்ணன், மேகநாதன் உருவங்களை வீதி வலமாக எடுத்து வருவார்கள். அதுமட்டுமின்றி அந்த மூவரைப் போல வேஷம் தரித்து வீதிகளில் நாடகமாடியும் செல்வர். கடைசி நாளான விஜயதசமியன்று ராவண கும்பகர்ண உருவங்களை கொளுத்தி வாண வேடிக்கை நடத்துகின்றனர்.
காளிமாதாவின் பிறந்தகம் வங்காளம். வங்காளியின் இஷ்ட தெய்வம் காத்யாயனியைத் திருமணம் செய்து கொண்ட பிறகு ஆண்டுக்கு ஒரு முறை ஒன்பது நாட்கள் அவளுடைய பிறந்தகமான வங்காளத்திற்கு வந்து விட்டுப்போக வேண்டும் என்று சம்புவன் கேட்டுக்கொண்டான்.
பத்தாவது நாள் திரும்பத் தாங்கள் அழைத்துக்கொள்ளலாம் என்றும் கூறினான். அதைத்தான் வங்காளிகள் ‘துர்க்கா பூஜை’யாக பத்து நாட்கள் கொண்டாடுகின்றனர். திருமணமான பெண்களை பிறந்த வீட்டிற்கு அனுப்பி வைத்து ஆனந்தமாய் கொண்டாடுகின்றனர்.
இங்கு பொம்மைக் கொலு வைப்பர். அப்போது சுந்தரகாண்டம், சீனிவாச கல்யாணம் படிப்பர். மைசூர் மாநில மக்களின் இஷ்ட தெய்வம் சாமுண்டி, அவளை மகிடாசுரமர்த்தினி என்று போற்றித் துதிக்கின்றனர். மைசூர் அரசர்கள் ஆட்சிக்காலத்தில் தசராப் பண்டிகையின் போது நாட்டுக்கலைஞர்களை தர்பாரில் அழைத்து பரிசளித்து கவுரவித்தனர். அப்போது நடைபெறும் அரசரின் யானை பவனியை காணக்கண்கோடி வேண்டும்.

No comments:

Post a Comment