Monday, September 30, 2013

சுகபோக இன்பம் தரும் சுக்கிர பகவான்

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அவரவர் பிராப்தப்படி ஏற்ற, இறக்கங்கள், இன்ப, துன்பங்கள், லாப நஷ்டங்கள், நிறை குறைகள் அமைகின்றன. இதற்கெல்லாம் காரணம் நமது பூர்வ புண்ணிய கர்ம வினையாகும். அந்த கர்ம வினைக்கேற்பவே இந்த பூமியில் பிறக்கிறோம். அந்தந்த காலகட்டத்தில் என்ன நடக்க வேண்டும் என்பதை நம் ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகள் தீர்மானிக்கின்றன. ஜோதிட சாஸ்திரத்தில் 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள், 9 கிரகங்கள், திசைகள், புக்திகள், அந்தரங்கள், காரகத்துவம் என பல வகையாக பிரித்துள்ளனர். ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒவ்வொரு ஆதிக்கம், காரகத்துவம் தரப்பட்டுள்ளது.

அந்த வகையில் அசுரகுரு என்று போற்றப்படுபவரும், உலகை காக்க வான் மழை பொழிவிப்பவரும், இறந்தவர்களையும் எழுப்பும் ஆற்றல் உடையவரும், சுகபோக இன்பங்களை தருபவருமான சுக்கிரன் நம் வாழ்க்கையின் மிக முக்கிய கிரகம் ஆவார். ஒருவர் சாதாரண நிலையில் இருந்து திடீர் ராஜயோக பலன்கள், பதவி, பட்டம், வீடு, வாசல், பங்களா, கார், அதிகாரம் என்று அமையும்போது, ‘அவருக்கென்னப்பா.. சுக்கிர திசை அடிக்கிறது’ என்று சொல்வார்கள். அந்தளவுக்கு வினோதங்கள் புரிந்து ஒருவரது வாழ்வில் வளங்களை சேர்க்கும் வல்லமை படைத்தவர் சுக்கிர பகவான்.

ஆய கலைகள், அனைத்து விதமான ஆசாபாசங்களுக்கும் அதிகாரம் பெற்றவர், காதலின் ஏகபோக சக்கரவர்த்தி, சகல சௌபாக்ய யோகங்களையும் தரவல்லவர் சுக்கிரன். இவரை ‘சிற்றின்பத்தின் திறவுகோல்’ என்றுகூட சொல்லலாம். திருமண பந்தத்துக்கு காரணமானவர் என்பதால் இவருக்கு ‘களத்திர காரகன்’ என்ற அந்தஸ்து உண்டு. இப்படிப்பட்ட சுக்கிரன் ஒருவரது ஜாதகத்தில் நல்ல அம்சங்களுடன் அமைந்தால் எல்லா விதமான சுபசௌபாக்யமும் கிடைக்கும். பருவ வயதில் திருமணம் கூடிவரும். நீங்காத செல்வமும், நிறைவான சந்தோஷமும் கிடைக்கும்.

வழிபாடு - பரிகாரங்கள்

சுக்கிரன் பலம் பெற்றிருந்தாலும், பலம் குறைந்திருந்தாலும், சுக்கிரனுக்குரிய வழிபாடுகள், பரிகாரங்கள் செய்வதன் மூலம் யோகங்கள் விருத்தியடையும்.

பெண்கள் சுக்கிர வாரம் எனும் வெள்ளிக்கிழமை விரதம் இருந்து வீட்டில் திருவிளக்கு பூஜை செய்வது நலம் பயக்கும். மாலையில் அம்மன், அம்பாள், ஆண்டாள் கோயிலுக்கு சென்று வழிபடலாம். அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், ஸ்ரீலட்சுமி காயத்ரி மந்திரம், சுக்கிர காயத்ரி மந்திரம் சொல்லலாம். ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாதரை தரிசித்து பிரார்த்திக்கலாம். சுக்கிர ஷேத்திரமான கஞ்சனூர், கும்பகோணம் அருகில் உள்ளது. இங்கு சென்று, தேவியருடன் அருள் பாலிக்கும் சுக்கிரனை வழிபட்டால் எல்லா வகையான திருமண தோஷங்களும் நீங்கும். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருப்பவர்கள் ஒன்று கூடுவார்கள்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள வெள்ளீச்சரம் என்ற ஸ்தலம் சுக்கிரனுக்கு உரியது. இங்குள்ள சுக்கிரேஸ்வரர் சுக்கிரனின் அம்சமாக உள்ளார். இவரை வழிபட குடும்பத்தில் நலங்களும் வளங்களும் சேரும். தன, தான்ய விருத்தி உண்டாகும். கண்கள் சம்பந்தமான கோளாறுகள் நிவர்த்தியாகும். பரிகார தலங்கள், விசேஷ கோயில்களுக்கு சென்று வழிபட முடியாதவர்கள் வீட்டருகே இருக்கும் கோயிலில் நவக்கிரக சன்னதியில் சுக்கிர பகவானை வழிபடலாம். வருடா வருடம் வரும் வரலட்சுமி நோன்பு அன்று சுமங்கலிகளுக்கு வெற்றிலை பாக்கு, பூ, பழம் கொடுத்து ஆசி பெற்றால் தடைகள் நீங்கும். சுபிட்சம் மலரும். நாளை சுக்கிர பகவான் ஜெயந்தியாகும். இந்நாளில் சுக்கிர பகவானை வணங்கி வழிபட்டு அவரது அருள் கடாட்சம் பெறுவோமாக!
Ganesan Pondicherry

சுக்கிரன் அம்சங்கள்

கிழமை    : வெள்ளி
தேதிகள்    : 6, 15, 24
நட்சத்திரம்    : பரணி, பூரம், பூராடம்
ராசிகள்    : ரிஷபம், துலாம்
உச்சம்    : மீனம்
நீச்சம்    : கன்னி
ரத்தினம்    : வைரம்
உலோகம்    : வெள்ளி
தானியம்    : மொச்சை
நிறம்    : வெண்மை
ஆடை    : வெண்பட்டு
திசா காலம்    : 20 ஆண்டுகள்

No comments:

Post a Comment