Saturday, February 20, 2016

நல்வழி காட்டும் சாஸ்த்திரம்

நல்வழி காட்டும் சாஸ்திரம்

சாஸ்திரத்தை இன்று கடைபிடித்தால் நாளையே பலன் கிடைத்துவிடும் என்று  எண்ணுவது தவறு. போன மாதம் வேலை செய்ததற்கு இந்த மாதம் சம்பளம் வாங்குகிறோம். அதுபோல தான் சாஸ்திரங்களை கடைபிடிக்கும் போதே பெரிய முன்னேற்றம் தெரியவில்லையே என்று நினைக்கக் கூடாது. நல்ல விஷயங்கள் செய்து வரும்போது இன்று இல்லையென்றாலும் ஒருநாள் மாபெரும் வெற்றியை அடைய செய்கிறது.

சாஸ்திரங்களை நம்பிக்கையுடன் கடைபிடித்தால் நிச்சயம் பலன்தரும்.  எப்படி நிலக்கரி மண்ணுக்குள் அதிக வருடம் பொறுமையாக கிடந்து வைரமாக மாறுகிறதோ அப்படிதான் நம்பிக்கையும் நிச்சயம் வாழ்க்கையை வைரமாக ஜொலிக்கச் செய்யும்.

கொடி மரத்தின் தெய்வ சக்தி
கோபுர தரிசனம் கோடி புண்ணியம். அதேபோல ஆலயத்தில் இருக்கும் கொடிமரத்துக்கும் மகத்துவம் இருக்கிறது. நாம் சில நிமிடமாவது கொடிமரத்தின் அருகே நின்று நம் பிராத்தனைகளை மனதில் நினைத்தால் இறைவன் எங்கிருந்தாலும் நமது வேண்டுதலும், பிராத்தனைகளும் கடவுளிடம் தடையின்றி அடைகிறது. கோயிலுக்குள் மூல விக்கிரக தரிசனம் அவசியம் என்பதுபோல கொடிமர தரிசனமும் அவசியம். கொடிமரத்தை புதுப்பிக்கும் போது அதில் நமது பங்கும் சிறியதாவது இருக்க வேண்டும்.
எப்படி விஞ்ஞானிகளுக்கு தகவல் தர சாட்டிலைட் உதவுகிறதோ அதுபோல இறைவனுடைய சாட்டிலைட் இந்த கொடிமரம். வானுலகில் உலவும் கிரகங்களின் ஆற்றல்களை தனக்குள் கிரகித்துவைத்திருக்கும். கொடிமர தரிசனம் செய்தால் நம் பாவங்களை நீக்கி   இறைவனுடைய அருளாசியை பரிபூரணமாக பெற்று தரும்.

தென்திசையை பார்த்து உட்காரலாமா?
தென்திசையை பார்த்தபடி அதிக நேரம் உட்காரகூடாது. அத்திசை யமதர்மராஜாவுக்கு உகந்தது. இறந்தவர்களுக்கு தர்பணம் கொடுக்கும் போது மட்டும்தான் தென்திசையை நோக்கி உட்கார வேண்டும. சுபநிகழ்ச்சி நடக்கும் போதும் தெய்வீக யாகங்கள் செய்யும்போதும் தென்திசையை நோக்கி உட்காரக்கூடாது. எமதர்மராஜரின் அருட்பார்வை பார்க்கும்படி தென்திசையை நோக்கி உட்கார்ந்தால் உடல் மெலிந்து முகம் வசிகரம் இல்லாமல் இருக்கும்.
காமாச்சி அம்மன் படத்தை பார்க்க பார்க்க கலை இழந்த முகமும் கலையாக மாறும் என்று சாஸ்திரம் சொல்கிறது. தென்திசை பார்த்து உட்கார்ந்தால் முகத்தில் வசீகரதன்மை போய்விடும். அதனால் கிழக்கு,மேற்கு,வடக்கு திசைகளை நோக்கி உட்காருவது நன்மை தரும். ஆனால் தூங்கும் போது கிழக்கு, அல்லது தெற்கு திசையில் தலைவைத்து உறங்கலாம்.

வீட்டில் தங்க நகை சேர வேண்டுமா?
வீட்டில் தங்கநகையாக சேர வேண்டுமானால் அட்சய திதி வரைக்கும் காத்திருக்கவா முடியும்.? இதற்கு ஒரு வழி இருக்கிறது. பரணி, பூரம்,பூராடம்  போன்ற நட்சத்திரம் வரும் நாட்களில் சுக்கிரன், புதன் ஹோரையில் ஒரு கிராம் தங்கநகை வாங்கினாலும் கூட அட்சய பாத்திரம் போல நகையாக வாங்கும் யோகம் வரும். அதேபோல் புதன், வெள்ளி கிழமைகளில் இந்த நட்சத்திரத்தோடு இந்த ஹோரையும் சேர்ந்ததுபோல இருக்கும் நாட்களில் நகை வாங்கினால் உங்களைவிட அதிர்ஷ்டசாலி யாரும் இல்லை.

இராஜயோகம் தரும் நெல்லிக்காய்
இராஜயோம் வரவேண்டும் என்றால் நெல்லிக்காயை தேய்த்து குளிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். நெல்லிமரம், ஸ்ரீமகாலஷ்மியின்  உள்ளங்கையில் உருவானது.  அதனால் நெல்லிவாசம் இருக்கும் இடத்தில் லஷ்மி வாசம் செய்யும். பெருமாளுக்கு உகந்த தினமான ஏகாதசி அன்று நெல்லிகாயை தேய்து குளித்தால் இராஜயோகம் வரும்.

புது ஆடைகளில் மஞ்சள் தடவி அணிவது ஏன்?
புது துணியை அணியும் முன் அந்த துணியின் ஓரத்தில் மஞ்சளை தடவிய பிறகு அணியவேண்டும். எதனால் இதை செய்யவேண்டும் என்றால், கடைகளில் பலபேர் அந்த துணியை எடுத்து பார்த்து இருப்பார்கள். ஒருவேலை அந்த துணியை அணிந்தும் பார்த்து இருப்பார்கள். அவர்களின் தோஷம் அந்த புது டிரஸ் போடுபவர்களுக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதால், மஞ்சளை சின்னதாக தடவி அணிந்தால் தோஷங்கள் நீங்கும்.

No comments:

Post a Comment